திவாலான காரைக்கால் துறைமுகம் ஏலத்தில் யாருக்கு கிடைக்கும்? போட்டியில் வேதாந்தா, அதானி குழுமங்கள்!
காரைக்கால்: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்குட்பட்ட காரைக்கால் துறைமுகத்தை ஏலம் எடுப்பதில் அதானி, வேதாந்தா குழுமங்கள் போட்டியில் உள்ளன.
காரைக்கால் துறைமுகம் கடனில் சிக்கி தவித்த நிலையில் திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது காரைக்கால் துறைமுகம். இத்துறைமுகத்தின் நிலுவை கடன் தொகை ரூ2,960 கோடி. தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திவாலனதாக காரைக்கால் துறைமுகம் அறிவித்தது.
“அப்டேட்” ஆன ஆர்எஸ்எஸ்.. டவுசருக்கு பதில் “காக்கி பேண்ட்” - புதுச்சேரி அணிவகுப்பில் பாஜக அமைச்சர்கள்
களத்தில் யார் யார்?
இதனையடுத்து காரைக்கால் துறைமுகம் ஏலத்துக்கு வந்தது. காரைக்கால் துறைமுக ஏலத்தில் கலந்து கொள்வதான டெண்டர்கள் கோரப்பட்டிருந்தன. காரைக்கால் துறைமுகத்தை முதலில் அதானி குழுமம்தான் ஏலம் எடுக்கும் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில்தான் வேதாந்தா குழுமமும் (தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம்) போட்டியில் களமிறங்கியது. அத்துடன் ஜேஎஸ்டபிள்யூ இன்பிரா, ஜிண்டால் பவர், ஆர்கேஜி பண்ட், சாகாசியஸ் கேபிடல் என மேலும் சில நிறுவனங்களும் போட்டி போட்டன. இந்த போட்டியில் ஏலதாரர்கள் 2 பேரை இறுதி செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
காரைக்கால் துறைமுகம்
காரைக்கால் துறைமுகமானது அனைத்து காலநிலைகளையும் எதிர்கொள்ளக் கூடிய திறன் கொண்டது. புதுச்சேரி அரசு மற்றும் மார்க் நிறுவனம் இணைந்து இந்த துறைமுகத்தை நிர்வகித்து வந்தன. 2009-ம் ஆண்டு முதல் காரைக்கால் துறைமுகம் செயல்பாட்டு வந்தது. காரைக்கால் துறைமுகம் மூலம் ஆண்டுக்கு ரூ1,000 கோடி வருவாய் ஈட்டப்பட்டும் வந்தது. காரைக்கால் துறைமுகத்தில் 5 கப்பல்கள் நிறுத்த முடியும். சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு அடுத்த பெரிய துறைமுகம். நிலக்கரி, சர்க்கரை, சிமெண்ட் உள்ளிட்ட சரக்குகளை காரைக்கால் துறைமுகம் கையாண்டு வந்தது. ஆனாலும் நிலக்கரி இறக்குமதிதான் காரைக்கால் துறைமுகத்தின் பிரதானமாக இருந்தது.
நிலக்கரி
காரைக்கால் துறைமுகத்தின் நிலக்கரி இறக்குமதி, வெளி இடங்களுக்கு அனுப்புவது ஆகியவற்றால் சுற்றுச் சூழல் மாசு ஏற்படுவதாக சர்ச்சை வெடித்தது. இதனையடுத்து ரூ600 கோடியில் துறைமுகத்தை இயந்திரமயமாக்கும் நடவடிக்கையை நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. மேலும் காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்பட்டதன் மூலமாக திருச்சி கோட்ட ரயில்வேயும் வருவாய் ஈட்டியது.
யாருக்கு போகும்?
காரைக்கால் துறைமுகத்தால் நேரடியாகவும் மறைமுகமாகவும் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். இத்துறைமுகத்துக்காக இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் என பல வங்கிகளிடம் இருந்து கடன்பெறப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அதானி அல்லது வேதாந்த குழுமம் ஆகியவற்றில் ஒன்றின் வசம் காரைக்கால் துறைமுகம் செல்லக் கூடும் என்கின்றன தகவல்கள்.