நான் சொர்க்கத்தில் இருப்பேன்.. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதி பகீர் பேச்சு
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இன்று மத்திய ரிசர்வ் படையினர் மீது தாக்குதல் நடத்தி 40 பேருக்கும் மேல் பலியாக காரணமாக இருந்த தீவிரவாதி குறித்த பின்புலம் வெளியாகியுள்ளது.
சிஆர்பிஎப் வீரர்கள் பயணித்த பஸ் மீது ஸ்கார்பியோ வகை காரை மோதச் செய்து பெரும் சேதத்தை விளைவித்தவன் பெயர் அடில் அகமது தார். ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின், குன்டிபாக் கமாண்டோ வகாஸ் என அழைக்கப்படுபவன்.
350 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை ஸ்கார்பியோ காரில் நிரப்பிச் சென்று, சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பஸ் மீது மோதச் செய்துள்ளான் அடில் அகமது. இந்த தாக்குதலில் ஈடுபட்டது அடில் அகமது என்பதை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு உறுதிப்படுத்தி புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
"எனது பெயர் அடில், நான் ஓராண்டு முன்பாக ஜெய்ஷ் இ முகமது அமைப்பில் சேர்ந்தேன். ஓராண்டு காத்திருப்புக்கு பிறகு, நான் இந்த அமைப்பில் சேர்ந்ததற்கு உரிய வாய்ப்பை (தாக்குதல் நடத்தும் வாய்ப்பு) பெற்றேன். இந்த வீடியோ உங்களை வந்தடையும் முன்பாக, நான் சொர்க்கத்தில் இருப்பேன்.. இதுதான் காஷ்மீர் மக்களுக்கு எனது கடைசி மெசேஜ்" இவ்வாறு தீவிரவாதி அடில் அகமது வீடியோவில் உரையாற்றும் காட்சியை ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.
அடில் முகமது தனது கையில் ரைஃபில் வைத்திருப்பதை போன்ற போட்டோ இப்போது சமூக வலைத்தளங்களிலும் வைரலாகியுள்ளது. கடந்த வருடம், முகமது உஷ்மான் என்ற தீவிரவாத தளபதி பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில்தான், இந்த தாக்குதல் நடந்திருக்கும் என கூறப்படுகிறது.