ரைஸ் பீர், மகுவா, மாம்பழ ஒயின்... 'திராவிட' பழங்குடிகளின் 'பண்பாட்டு' அடையாளமாக ஒன்றிய மதுபானங்கள்!
ராயகடா: நாடு முழுவதும் மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்ற குரல் ஒலித்து வரும் நிலையில் இந்த தேசத்தின் பழங்குடி இனமக்கள் தாங்களே தயாரிக்கும் மதுபானங்களை தங்களது பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக இன்றளவும் போற்றி வருகின்றனர்.
நாடு விடுதலை அடைந்து 67 ஆண்டுகளாகியும் மின்சாரத்தையும் சாலை வசதிகளையும் எட்டிக் கூட பார்க்காத எண்ணற்ற பழங்குடி இன கிராமங்கள் இன்றளவும் உண்டு. குறிப்பாக சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிஷா, ஆந்திரா மாநிலங்களில் மின்சாரம் என்னவென்றால் என்ன எனக் கூட தெரியாத கிராமங்கள் ஏராளம்..
இந்த மாநிலங்களில் வாழும் பெரும்பாலான பழங்குடிகள் திராவிடர் பழங்குடிகள் என்றே வரலாற்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இவர்கள் பேசும் மொழியை சிறிது நேரம் கூர்ந்து கவனித்தால் நமக்கு எளிதில் புரியும்.. அதில் தமிழில் சொற்களும் கலந்தே இருக்கும்..
உள்ளூர் தயாரிப்பு மதுபானங்கள்
இந்த பழங்குடி இன மக்களின் இன்ப துன்பங்களில் எப்போதும் நீக்கமற மதுபானங்களும் இணைந்தே இருக்கும். இவர்கள் அருந்தும் மதுபானங்கள், அரசு அல்லது தனியார் நடத்துகிற நிறுவனங்களின் மதுபான வகைகளாக இருப்பது இல்லை.
ரைஸ் பீர்
நகரங்களை எட்டிப்பார்ப்பவர்களில் ஒரு சிலர்தான் அத்தகைய மதுபானங்களை அருந்துகிறவர்களாக இருக்கிறார்கள்.. ஆனால் பொதுவான மதுபானமாக இருப்பது ரைஸ் பீர் மற்றும் மகுவாதான்.
சுண்டக் கஞ்சி போல..
இதில் ரைஸ் பீர் என்பது குளிர்ச்சியானது. மகுவா சாராயம் என்பது செம ஹாட். சென்னையின் பூர்வகுடிகளின் மதுபானமாகிய சுண்டக் கஞ்சியை ஒத்ததுதான் இந்த ரைஸ் பீர். அரிசி சாதத்தில் சில மூலிகைகள் சேர்த்து சில நாட்கள் நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது இந்த ரைஸ் பீர்.
குடும்பம் குடும்பமாக ரைஸ் பீர்
உறவினர்கள் வந்துவிட்டால் வீடுகளில் ரைஸ் பீர் உடனடி தயாரிப்பாகவும் கிடைக்கும்.. பொதுவாக அனைத்து இன்ப துன்பங்களில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவரும் அருந்துகிற ஒரு மதுபானமாக ரைஸ் பீர் இருக்கிறது.
வெயிலில் இருந்து பாதுகாப்பு
இந்த ரைஸ் பீர் அருந்துவதன் மூலம் வெயிலின் கொடுமையால் ஏற்படும் சன்ஸ்ட்ரோக் என்பதைத் தடுக்க முடியுமாம்..இதனால்தான் மலைக் காடுகளில் 40 டிகிரி செல்சியஸ் வெயிலையும் சுலபமாக பழங்குடிகள் எதிர்கொள்ள முடிகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த ரைஸ் பீரில் வழக்கமான ஒயினை, பீரை விடவும் அதிகமான ஆல்ஹகால் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மகுவா சாராயம்
இதேபோல் மகுவா... பழங்குடி இன கிராமங்களுக்குள் நுழைந்தால் சில வீடுகளில் மஞ்சள் நிற பூக்கள் தரையிலோ அல்லது ஓடுகளிலோ கொட்டப்பட்டு உலர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும். மகுவா மரத்தின் பூக்களையும் காய்களையும் சேகரித்து அதில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் மகுவா சாராயம். இது பழங்குடி மக்களின் ஹாட் டிரிங்ஸ். குளிர்காலங்களில் இதுதான் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
சந்தைகளில் விற்பனை
இந்த மகுவாவும் ரைஸ் பீரும் வாரந்தோறும் கூடும் சந்தைகளில் ஒரு ஓரமாக கனஜோராகவும் விற்பனை செய்யப்படுவது இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது. ஆண்களும் பெண்களும் சகஜமாக இவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
மாம்பழ ஒயின்
இந்தியாவில் ஒடிஷாவில் மல்காங்கிரி மாவட்டத்தில் மட்டுமே வசிக்கிற போண்டா பழங்குடி இனமக்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும் மதுபானம் மாம்பழ சாராயம்.. அதாவது மாம்பழ ஒயின்.
வயலில் காய்ச்சப்படுகிறது
போண்டா பழங்குடி இன மக்களின் கிராமங்களில் நெல் வயல்களில் பெண்கல் வயல்வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்க கனஜோராக ஆண்கள் இந்த மாம்பழ சாராயத்தை தயாரித்துக் கொண்டிருப்பதைப் பார்க்க முடியும். இது ஒயின் வகையைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது. இதனை குடிக்க ஒருவகை மூங்கில் உபகரணத்தை பயன்படுத்துகின்றனர்.
பண்பாட்டு அடையாளம்..
வெளி உலகத்துடன் இன்னமும் ஒன்றிவிட முடியாத தொலைவில் இருக்கும் ஆதிகுடிகளின் ஆதிகாலத்து மதுபானங்கள்.. போதைக்கானவை மட்டுமே அல்ல.. அது அவர்களது பண்பாட்டின் அடையாளமும் கூட..
மதுவிலக்கு சட்டங்களால் மண்ணின் ஆதி மனிதர்களின் கலாசாரத்தை காலாவதி செய்துவிட முடியுமா?