திமுகவில் உருவாகும் ‘ஷிண்டே’.. அது இவராகவும் இருக்கலாம்.. பொடி வைத்துப் பேசிய சி.வி.சண்முகம்!
கள்ளக்குறிச்சி : சிவசேனாவை இரண்டாகப் பிரித்த ஏக்நாத் ஷிண்டே போல திமுகவிலும் ஒரு ஷிண்டே உருவாகலாம், அது கனிமொழியாகவோ, துரைமுருகனாகவோ கூட இருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய ராஜ்யசபா எம்.பி சி.வி.சண்முகம், ஓ. பன்னீர்செல்வத்தை, திமுக தனது கையாளாகப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டினார்.
மேலும், ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கியது போல இந்த முறையும் இரட்டை இலையை முடக்க ஓபிஎஸ் முயற்சிப்பதாகவும் சிவி சண்முகம் தெரிவித்தார்.

எப்போதெல்லாம் எதிர்க்கட்சியோ
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், ராஜ்யசபா உறுப்பினருமான சி.வி.சண்முகம் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "எப்போதெல்லாம் எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக அமர்கிறதோ அடுத்து வரும் தேர்தலில் பலம் வாய்ந்த ஆளும் கட்சியாக உருவெடுக்கிறது. 1989ல் தோல்வி அடைந்த அதிமுக 1991ல் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

அசுர பலம்
2006ல் எதிர்க்கட்சியாக இருந்தது அதிமுக. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியமைத்தது அதிமுக. அப்போது எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட திமுக பெறாமல் விஜயகாந்தின் அருகாமையில் அமரும் நிலை ஏற்பட்டது. இப்போது மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளது அதிமுக. அடுத்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்." எனப் பேசினார்.

துணை போன ஓபிஎஸ்
மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாகத் தாக்கிப் பேசிய மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம், "டீக்கடையில் வேலை செய்தவரை, சட்டமன்ற உறுப்பினராக்கி, மூன்று முறை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்தவர்கள் அதிமுக கட்சித் தொண்டர்கள். அப்படிப்பட்ட அதிமுகவின் தலைமை அலுவலகத்தை போலீஸ் பாதுகாப்புடன் அடித்து உடைத்து சூறையாடுவதற்கு ஓ.பன்னீர்செல்வம் துணை போயிருக்கிறார்.

திமுகவின் கையாள்
ஏற்கனவே இரட்டை இலை சின்னத்தை முடக்கியவர் இந்த ஓ.பன்னீர்செல்வம் தான். தற்போது மீண்டும் சின்னத்தை முடக்குவதற்கு திமுக துணையோடு ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். திமுக தனது கையாளாக ஓ.பன்னீர்செல்வத்தைப் பயன்படுத்துகிறது." எனக் குற்றம்சாட்டினார்.

திமுகவில் ஷிண்டே
மேலும் பேசிய சிவி சண்முகம், "காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது, மகாராஷ்டிராவில் ஒரு ஷிண்டே வந்தது போல அடுத்து திமுகவிலும் ஒரு ஷிண்டே வருவார். அது யார் என்று நாம் சொல்ல முடியாது, அது கனிமொழியாகவும் இருக்கலாம், துரைமுருகனாகவும் இருக்கலாம், யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம்" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications