திரிபுராவில் 18 ஆண்டுகாலம் அமலில் இருந்த சிறப்பு ஆயுதப் படை சட்டம் அதிரடியாக வாபஸ்!!
அகர்தலா: திரிபுராவில் 18 ஆண்டுகாலம் அமலில் இருந்த ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் சட்டத்தை அம்மாநில அரசு அதிரடியாக வாபஸ் பெற்றுள்ளது.
வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரங்களை அளிக்கும் சட்டம் அமலில் இருந்து வருகிறது. மணிப்பூரில் இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சமூக ஆர்வலர் இமோம் ஷர்மிளா 15 ஆண்டுகாலமாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
ஜம்மு காஷ்மீரிலும் இந்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கூட இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமையில் அம்மாநில அமைச்சரவை நேற்று கூடி இந்த சட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. 1997 ஆம் ஆண்டு முதல் திரிபுராவில் சிறப்பு ஆயுதப் படைச் சட்டம் அமலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.