கல்பர்கி படுகொலையைத் தொடர்ந்து... எழுத்தாளர் கே.எஸ்.பக்வானுக்கும் மிரட்டல் கடிதம்
பெங்களூரு: பிரபல எழுத்தாளர் கல்பர்கி கொல்லப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்கு முன்னதாகவே, மற்றொரு எழுத்தாளரான கே.எஸ்.பக்வானுக்கும் கடிதம் வாயிலாக மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வாரை சேர்ந்த எழுத்தாளர் எம்.எம்.கல்பர்கி. புரட்சிகரமான கன்னட எழுத்தாளராகிய கல்பர்கி, கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமாவார். கடந்த மாதம் 30ம் தேதி காலை மர்ம நபர்கள் சிலர் கல்பர்கியை அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொலை செய்தனர். இந்தப் படுகொலை சம்பவம் நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கல்பர்கி கொல்லப்பட்ட சில மணி நேரங்களிலேயே மங்களூரைச் சேர்ந்த பஜ்ரங்தள் அமைப்பு ஆதரவாளர் புவித் ஷெட்டி என்பவர் தனது டிவிட்டர் தளத்தில், "இந்துத்துவாவை மோசமாக பேசிய எழுத்தாளர்களான அனந்தமூர்த்தி மற்றும் கல்புர்கி ஆகியோர் நாய்களைப் போல் இறந்தனர். அடுத்தது பக்வான்தான்" என பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது எழுத்தாளர் கே.எஸ்.பக்வானுக்கு கடிதம் வாயிலாக மிரட்டல் விடுக்கப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை, பக்வான் வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது மனைவி பெற்றுள்ளார். பின், இது தொடர்பாக அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
மிரட்டல் கடிதம் குறித்து பக்வான் கூறுகையில், ‘இத்தகைய மிரட்டல் கடிதம் வருவது எனக்கு ஒன்றும் புதிதல்ல. நான் இதற்கெல்லாம் அஞ்சமாட்டேன்' எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications