குஜராத்தில் தளர்ந்த பாஜகவின் இரும்புப் பிடி.. மோடிக்கு பிறகு களையிழந்த காவி? என்ன நடக்கிறது? பின்னணி
காந்திநகர்: குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமர் ஆனதற்கு பிறகிலிருந்தே அம்மாநிலத்தில் பாஜகவின் இரும்புப் பிடி தளரத் தொடங்கிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது, நரேந்திர மோடிக்கு பிறகு கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் 3 முதல்வர்களை குஜராத் பார்த்திருக்கிறது. குஜராத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக 2014-ம் ஆண்டு வரை பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே அங்கு முதல்வர் முகமாக இருந்துள்ளார்.
ஆனால், நரேந்திர மோடிக்கு பிறகு பல முதல்வர்கள் பதவியேற்றாலும் அவர்களால் மோடியை போல நீண்டகாலம் அந்த நாற்காலியில் அமர முடியவில்லை. இதற்கு மக்கள் மத்தியில் பதிந்துவிட்ட மோடியின் பிம்பமும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. முதல்வராக நரேந்திர மோடி இருந்த வரை, பாஜகவின் இரும்புப் பிடியில் குஜராத் இருந்தது. ஆனால், அவர் டெல்லி சென்றதும் பாஜக மீது குஜராத் மக்களுக்கு ஒருவித அதிருப்தி ஏற்பட தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
2014 தேர்தல் பிரச்சார தொனியிலேயே பேசும் மோடி.. நாட்டை காங்கிரஸ் சீரழித்துவிட்டதாக குஜராத்தில் பேச்சு
பரபரக்கும் குஜராத் தேர்தல்..
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகும் தேர்தல் என்பதால் முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த குஜராத் தேர்தலை ஒட்டுமொத்த நாடும் உற்று கவனித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமாகவும் இருப்பதால் குஜராத் தேர்தல் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அரியணையை அசைக்கும் ஆம் ஆத்மி..
25 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜகவின் இரும்புக் கோட்டையாக விளங்கி வந்த மாநிலம் குஜராத் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். அதனால், இதற்கு முன்பு வரை குஜராத் சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக பெரிய அளவில் சிரத்தை எடுத்ததில்லை. எப்படியும் பாஜகவுக்கு தான் ஆட்சிக்கட்டில் என்பது பல ஆண்டுகளாக குஜராத்தில் எழுதப்படாத விதியாக இருந்தது. ஆனால், இந்த முறையோ நிலைமை தலைகீழாக மாறி இருக்கிறது. காங்கிரஸ் தான் பிரதான எதிரி என பாஜக நினைத்துக் கொண்டிருந்த வேளையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் குஜராத்தில் களம் இறங்கியது அர்விந்த் கேஜ்ர்வாலின் ஆம் ஆத்மி. ஆரம்பத்தில் அனைவராலும் எள்ளி நகையாடப்பட்ட ஆம் ஆத்மி போக போக தனது விஸ்வரூபத்தை காட்ட தொடங்கியது. பாஜகவுக்கு போட்டியாக இந்துத்துவா அரசியலையும், காங்கிரஸுக்கு போட்டியாக ஜாதி அரசியலையும் கையில் எடுத்து தவிர்க்க முடியாத சக்தியாக ஆம் ஆத்மி உருவெடுத்திருக்கிறது. இதனால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸை பின்னுக்கு தள்ளி, பாஜகவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து அதன் அரியணையை அசைத்து வருகிறது ஆம் ஆத்மி.
ஆர்ப்பரித்த மோடி அலை..
இது ஒருபுறம் இருக்க, குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தவரை மட்டுமே பாஜகவின் இரும்புப் பிடியில் அம்மாநிலம் இருந்ததாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். குஜராத் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த போது பல அதிரடி மக்கள் நலத் திட்டங்களை கொண்டு வந்து அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். மேலும், அவரது ஆட்சிக்காலத்தில்தான் குஜராத் பெரும் தொழில் மையமாக உயர்ந்தது. இதனால்தான், நரேந்திர மோடியின் ஆட்சிக்காலம் குஜராத்தின் பொற்காலம் என அம்மாநில மக்கள் கூறுகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மோடியின் வசீகரமும், அசாத்திய பேச்சுத் திறமையும் பெரும் மக்கள் அலையை அவருக்கு ஆதரவாக எழச் செய்தது.
ஈர்ப்பை இழந்த பாஜக..
ஆனால், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி என்றைக்கு டெல்லி சென்றாரோ, அன்றில் இருந்தே குஜராத்தில் பாஜகவின் கால் தடம் சிறிது சிறிதாக அழியத் தொடங்கியதாக கூறுகின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அதேபோல, மோடி இல்லாததால் அங்கு பாஜகவின் இரண்டாம்கட்ட தலைவர்களாக இருப்பவர்கள் மத்தியில் "யார் பெரியவர்" என்ற போட்டி ஏற்பட்டதால் கட்சிக்குள் சிறு சிறு பூசல்களும், கோஷ்டிகளும் உருவாகின. அதன் காரணமாகவே, நரேந்திர மோடிக்கு பிறகு 8 ஆண்டுகளுக்கு உள்ளாகவே 3 முதல்வர்களை குஜராத் பார்த்தது. ஆனந்திபென் படேல், விஜய் ரூபானி, பூபேந்திர படேல் ஆகிய 3 முதல்வர்கள் அடுத்தடுத்து வந்த போதிலும், நரேந்திர அளவுக்கு கூட வேண்டாம்.. அவரது அரசியல் ஆளுமையில் 4-இல் 1 பங்கை கூட இவர்கள் பூர்த்தி செய்யவில்லை. மேலும், மக்கள் மனதிலும் இவர்களால் இடம்பெற முடியவில்லை. இதன் காரணமாகவே, பாஜக மீது தற்போது குஜராத் மக்களுக்கு ஒருவித அதிருப்தியும், சலிப்பும் ஏற்பட்டுவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவே, எதிர்வரும் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு இறங்குமுகம் ஏற்படவும் காரணம் எனக் கூறப்படுகிறது.