விரைவில், மாநில வாரியாக ஊழல் புரிந்தவர்கள் பட்டியல் வெளியிடப்படும்...: ஆம் ஆத்மி
மும்பை: விரைவில் ஊழல் புரிந்தவர்களின் பட்டியலை மாநிலம் வாரியாக வெளியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
நேற்று முந்தினம் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், ஊழல் குற்றம் சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக தங்கள் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் நிறுத்தப் படுவார்கள் என அறிவித்தார்.
அதன்படி, ஆம் ஆத்மி வெளியிட்ட ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரது பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
இதுதொடர்பாக, ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், மாநிலம் வாரியாக மேலும் ஒரு ஊழல் அரசியல்வாதிகள் பட்டியலை வெளியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் வாரே தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக, விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மகாராஷ்ட்ரா மற்றும் அரியானா மாநிலங்களில், இந்த பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக அவர் கூறியுள்ளார்.