தேவகௌடா சிறந்த தலைவர்- இது நேற்று... அவருக்கு ஓட்டுப் போடாதீங்க- இது இன்று.. மோடியின் டபுள் டாக் !
தேவகௌடா சிறந்த தலைவர் என்று அவரை பாராட்டிய நரேந்திர மோடி, அவருக்கு ஓட்டு போட்டு வீணடிக்காதீர் என்று பிரசாரம் செய்துள்ளார்.
பெங்களூர்: ராகுல் காந்தி, தேவகௌடாவை அவமதித்ததால் பொங்கி எழுந்து அவரை சிறந்த தலைவர் என்று சொன்ன பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அவருக்கு வாக்காளித்தீர் என்று கூறி தேவகௌடா மீது தனது இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. தொங்கு சட்டசபை ஏற்பட்டால் பாஜகவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கைகோர்க்கும் என்ற வியூகங்கள் பரவும் நிலையில் கட்சி தலைவர் தேவகௌடாவை ராகுல் விமர்சனம் செய்தார்.

அப்போது கௌடா போல் சிறந்த தலைவர் யாரும் இல்லை என்றும் அவர் என் வீட்டுக்கு வந்தால் அவரை வாசல் வரை சென்று அழைத்து செல்வேன் என்றும் வீதி வரை சென்று வழியனுப்புவேன் என்றும் மோடி பேசியிருந்தார். இதற்கு சித்தராமையாவோ, 75 வயது முதியவர் எடியூரப்பா உங்கள் கைகளை பற்றிக் கொண்டு மிகவும் குனிந்து வணக்கம் சொன்னபோது நீங்கள் கொடுத்த மரியாதையை நாங்கள் பார்த்தோம் என்று பதிலடி கொடுத்தார்.
இந்நிலையில் இன்று கெங்கேரியில் மோடி பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில் மதசார்பற்ற ஜனதா தளம் இந்த தேர்தலில் 3-ஆவது இடத்துக்கு தள்ளப்படும் என்பது கண்கூடாக தெரிகிறது. அவர்களால் அரசை அமைக்க முடியாது. இதுபோன்ற கட்சிக்கு உங்கள் வாக்குகளை அளித்து அதை வீணடிக்க போகிறீர்களா.
கர்நாடகத்துக்கு அக்கட்சி எதையும் செய்துவிடவில்லை. எனவே அவர்களுக்கு வாக்களிக்காதீர் என்று மோடி பேசினார். நேற்று வரை கௌடா சிறந்த தலைவர் என்று கூறிய நிலையில் தற்போது அவருக்கு வாக்களிக்காதீர் என்று கூறியிருப்பது மோடியின் இரட்டை பேச்சையே காட்டுகிறது.












Click it and Unblock the Notifications