அரசு எஞ்ஜீனியரிடம் ரெய்ட்.. சிக்கியது 100 கோடி வைரம், 2 கி. தங்கம், ரூ.10 கோடி பணம் மட்டுமே!
லக்னௌ: உத்தரபிரதேச மாநிலம் நொய்டா நகரில் உள்ள, நொய்டா ஆணையத்தின் தலைமை பொறியாளர், யாதவ் சிங்கிடம், வருமான வரித்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில், அவரின் காரில் இருந்த 10 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும், அவரது வீட்டில் இருந்து, ரூ.100 கோடி பெறுமானமுள்ள வைரங்களும், 2 கிலோ தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இத்தனைக்கும் இவரது மாத சம்பளம் ரூ. 50,000 கூட இல்லை.
உத்தரபிரதேச மாநில முதல்வராக மாயாவதி இருந்த போது, உள்கட்டமைப்பு பணிகளுக்கான தலைமை பொறியாளராக இருந்தவர் யாதவ்சிங்.
நொய்டா, கிரேட்டர் நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் வழி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுக்கு இவர்தான் பொறியாளராக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நொய்டா, யமுனா எக்ஸ்பிரஸ் திட்டங்களில் ரூ. 954 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதில் யாதவ் சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது.
உத்தரபிரதேசத்தில் கடந்த 2012ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அகிலேஷ் யாதவ் முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து யாதவ் சிங் நீக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. ஆனாலும், ஊழல் குற்றச்சாட்டில், குற்றம் நிரூபிக்கப்படாததால், யாதவ் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
இந்நிலையில், என்.சி.ஆர்., நகர்ப்புற இடங்களை முறைகேடாக விற்பனை செய்ததாக, மெக்கான் மற்றும் மீனு கிரியேஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த இரு நிறுவனங்களின் இயக்குனர் பொறுப்பில், யாதவ் சிங்கின் மனைவி, குசும்லதா, 2013ம் ஆண்டு வரையில் இருந்துள்ளார். எனவே, இதுகுறித்து வருமான வரி துறை தொடர்ந்து சோதனை மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் நொய்டாவில் செக்டார் 51-ல் இருக்கும் யாதவ்சிங் வீட்டிலும், அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது யாதவ்சிங்கின் காரை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அவரது காருக்குள் ரூ.10 கோடி பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
யாதவ் சிங்கின் வீட்டிலும் அவரது வங்கி லாக்கர்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ரூ.100 கோடி பெறுமானமுள்ள வைர கற்களும், 2 கிலோ தங்கமும் சிக்கியது. மற்றொரு காரிலிருந்த, 10 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லி மற்றும் காசியாபாத் நகரங்களில் மட்டும் 12 வங்கிகளில் லாக்கர்கள் வைத்துள்ளார் யாதவ் சிங்.
இதே போன்று அவரது கூட்டாளியான மெக்கான் நிறுவனத்தின் இயக்குனர், அனில் பெஷ்வாரிடமிருந்தும், 40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளதாக, வருமான வரித் துறை இயக்குனர் கிருஷ்ணா சைனி தெரிவித்தார். யாதவ் சிங், அனில் பெஷ்வார் ஆகிய இருவருமே, என்.சி.ஆர்., நகர்ப்புற இட விற்பனை முறைகேட்டில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.