அக்னிபாத்: செகந்திராபாத் வன்முறைக்கு மூளை? முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது! பரபர தகவல்
செகந்திராபாத்: தெலங்கானா செகந்திராபாத்தில் அக்னிபாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையானது. ரயில் எரிக்கப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி முன்னாள் ராணுவ வீரரும், ராணுவ பயிற்சி அகாடமி நடத்துபவருமான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரா கண்ட், ஜார்க்கண்ட், தெலங்கானா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பேராட்டம் தீவிரமடைந்துள்ளன.
நேற்று முன்திம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்திலும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் வன்முறையானது. ரயில் நிலையம் சூறையாடப்பட்டதோடு, ரயில் தீயிட்டு எரிக்கப்பட்டது.

துப்பாக்கிச்சூடு
இதனால் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து இறந்தார். 10க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விசாரணையில் வாரங்கால் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரசாமி-பூலாம்மா தம்பதியின் தாமோதர் ராகேஷ் (23) என்பவர் இறந்தது தெரியவந்தது. கல்லூரியில் டிகிரி படித்து வரும் இவர் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் உடல்தகுதி தேர்வில் தகுதி பெற்று எழுத்து தேர்வுக்கு தயாராகி வந்ததும் தெரியவந்தது.

முன்னாள் ராணுவ வீரர் கைது
இந்நிலையில் தான் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் ராணுவ வீரரான அவுலா சுப்பாராவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தான் போராட்டம் மற்றும் வன்முறைக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக போலீசார் கூறினர். இந்த போராட்டத்துக்காக இவர் வாட்ஸ்அப்பில் குழுக்களை உருவாக்கி அதன்மூலம் ஆட்களை திரட்டியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

7 இடங்களில் பயிற்சி அகாடமி
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக ஹைதராபாத், நர்சரோபேட்டை உள்பட 7 இடங்களில் ராணுவத்துக்கான பயிற்சி அகாடமி நடத்தி வருவதும், இவரிடம் அதிகமான இளைஞர்கள் பயிற்சி பெற்று வருவதும் தெரியவந்துள்ளது. இவரிடம் வன்முறை தொடர்பாாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர் கைது
மேலும் வன்முறை தொடர்பாக அதோனி, கர்னூல், குண்டூர், நெல்லூர், அமடலவலசை, விசாகப்பட்டினம் மற்றும் யலமஞ்சிலி ஆகிய பகுதிகளில் இருந்து பலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் போலீசார் பதிவு செய்த வீடியோ ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications