மத்திய அரசின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு ஏன் இல்லை.. தம்பிதுரை சொன்ன அந்த காரணம்
டெல்லி: தமிழர்களை செம்மர கடத்தல் என்ற பெயரில் சுட்டுக்கொல்லும் ஆந்திரா அரசின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளிக்க முடியாது என்று அதிமுக எம்.பியும், லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 15 நாட்களாக அதிமுக எம்பிக்கள் தர்ணா நடத்தி வருகிறார்கள். இன்றும் தர்ணா தொடர்ந்தது.
இதன்பிறகு நிருபர்களிடம் தம்பிதுரை கூறியதாவது: தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தி வருகிறோம். நாடாளுமன்ற இரு சபைகளும் இன்றும் முடக்கப்பட்டுள்ளன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரையில் போராட்டம் தொடரும் என்றார்.
காவிரி விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு, காங்கிரஸ் ஆதரித்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தயார் என்றார்.
37 எம்.பி.க்களை வைத்துக் கொண்டு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது என்றும், எனவே குறைந்தபட்ச எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்றால் காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
தெலுங்குதேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு, ஆதரவு தருவீர்களா என்ற நிருபர்கள் கேள்விக்கு, "தமிழகத்தை வஞ்சித்து வருவது ஆந்திரா. செம்மரக் கடத்தல் என்ற பெயரில் தமிழர்களை சுட்டுக் கொல்கிறது, அப்படிப்பட்ட, தமிழகத்தை வஞ்சிக்கும் ஆந்திர அரசுக்கு தமிழகம் துணை போக வேண்டுமா என்பதை ஸ்டாலின் விளக்கவேண்டும். இவ்வாறு தம்பிதுரை தெரிவித்தார்.