விமானி இல்லாததால் 2 மணிநேரம் தாமதம் ஆன ஏர் இந்தியா விமானம்: கடுப்பான பயணிகள்
டெல்லி: டெல்லியில் இருந்து புவனேஸ்வர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் விமானி இல்லாததால் 2 மணிநேரம் தாமதமாக கிளம்பியது.
ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று டெல்லியில் இருந்து புவனேஸ்வருக்கு கிளம்பியது. விமானத்தில் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் உள்பட பயணிகள் அனைவரும் தங்களது இருக்கைகளில் அமர்ந்துவிட்டனர். ஆனால் காலை 11 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் கிளம்பவில்லை.
விமானத்தை ஏன் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவில்லை என்று பயணிகளுக்கு விளக்கம் அளிக்காமல் காக்க வைத்துள்ளது ஏர் இந்தியா. பயணிகள் விமானத்தில் அமர்ந்து 1 மணிநேரம் 45 நிமிடங்கள் காத்திருந்தனர்.
விமானத்தை இயக்க விமானி இல்லாததால் காலதாமதம் ஆகியது பின்பு தெரிய வந்தது. இதையடுத்து பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து விமானி வரவழைக்கப்பட்டு விமானம் புவனேஸ்வருக்கு கிளம்பிச் சென்றது.
கடந்த வாரம் டெல்லியில் இருந்து புவனேஸ்வர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 8 மணிநேரம் தாமதாக கிளம்பியது. புவனேஸ்வர் செல்லும் விமானத்தில் பணிபுரியும் சிப்பந்திகளை பாஜக அமைச்சர் உள்ளிட்ட விஐபிக்கள் சென்ற போபால் விமானத்திற்கு மாற்றிவிட்டதே தாமதத்திற்கு காரணம்.