அஜ்மீர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பக்தர்கள் அவசர, அவசரமாக வெளியேற்றம்
அஜ்மீர்: அஜ்மீர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பக்தர்கள் அவசர, அவசரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள பிரபல க்வாஜா கரீப் நவாஸ் தர்காவில் குண்டு வெடிக்கும் என்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை 6.40 மணிக்கு யாரோ போன் செய்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தர்காவுக்கு விரைந்து சென்றனர். அப்போது தர்காவில் சுமார் 1 லட்சம் பேர் இருந்தனர். வெடிகுண்டு நிபுணர்களை பார்த்த பக்தர்கள் பீதி அடைந்தனர். போலீசார் பக்தர்களை தர்காவில் இருந்து அவசர, அவசரமாக வெளியேற்றினர்.
தர்கா வளாகம் முழுவதும் தேடியும் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. கவனிக்கப்படாத பை ஒன்று மட்டுமே கிடைத்தது. அதை பரிசோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை. சுமார் ஒன்றரை மணிநேர தேடலுக்கு பிறகே வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் அதிகாரி புபேந்தர் சிங் கூறுகையில்,
வெடிகுண்டை தேட காலை 7.45 மணி முதல் 9.15 மணி வரை தர்கா மூடப்பட்டது. தேடலில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததையடுத்து தர்கா மீண்டும் திறக்கப்பட்டது. தர்காவில் குண்டு வைக்கப்பட்டதாக யார் போன் செய்தார்கள் என விசாரித்து வருகிறோம் என்றார்.