தேர்தல் தோல்வி எதிரொலி: 36 வாரிய தலைவர்களை அதிரடியாக நீக்கிய அகிலேஷ் யாதவ்
லக்னோ: நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடி கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 36 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் அமைச்சர் பதவிக்கு இணையான பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தர பிரதேசத்தில் உள்ள 80 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 73 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றின. முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி வெறும் 5 இடங்களில் தான் வெற்றி பெற்றது. மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
இதையடுத்து தேர்தலில் கட்சிக்கு எதிராக வேலை செய்த அமைச்சர் பதவிக்கு இணையான வாரிய தலைவர் பதவி வகித்த 36 பேரை அகிலேஷ் யாதவ் பதவிநீக்கம் செய்துள்ளார். பீகாரில் ஐக்கிய ஜனதாதளம் நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். அது போல் நீங்களும் செய்வீர்களா என்று அகிலேஷிடம் கேட்டதற்கு, உத்தர பிரதேச அரசியல் நிலையை வேறு மாநிலத்துடன் ஒப்பிடக் கூடாது என்றார்.
மோடி அலை என்ற ஒன்றே இல்லை என்று கூறி வந்த அகிலேஷ், இனி மோடியுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications