கொரோனா கட்டுப்பாடுகளுடன் அமர்நாத் யாத்திரை.. பக்தர்களுக்கு ஆதார் அட்டை அவசியம்
அமர்நாத் புனித யாத்திரை வரும் பக்தர்கள் கண்டிப்பாக அவர்களது அடையாள அட்டையான ஆதார் அட்டையை எடுத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்: அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய வரும் யாத்ரீகர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆளுநர் மனோஜ் சின்கா தலைமையில் நடந்த அமர்நாத் ஆலய வாரிய கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.
காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவிலுக்கு ஆண்டுதோறும் புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரை ஜூன் 30ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரை 43 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்ப்பட்டுள்ளது. வழக்கம்போல், ரக்ஷாபந்தன் பண்டிகையன்று யாத்திரை முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுடன் யாத்திரை நடைபெறும் என்றும் ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார்

பனி லிங்க தரிசனம்
அமர்நாத் குகை கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அமர்நாத் குகையில் தோன்றும் பனிலிங்கம் ஆனது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை உருவாகி, அதன் பின்னர் இந்த பனிலிங்கம் உருகி விடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் பனிலிங்க தரிசனத்தை காண ஆயிரக்கணக்கான மக்கள் சென்று கொண்டுதான் இருக்கின்றார்கள்.

சக்தி பீடம்
அமர்நாத் குகை கோவிலானது கடல் மட்டத்திலிருந்து 3888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீ நகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது. பார்வதி தேவிக்கு வாழ்வின் ரகசியத்தை சிவபெருமான் கூறியது இந்த குகையில் தான் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த இடம் 51 சக்தி பீடங்களில் தேவியின் தொண்டைப் பகுதி விழுந்த இடமாக கூறப்படுகிறது.

யாத்ரீகர்கள் வருகை
இக்குகை 3,888 மீட்டர் உயரத்திலும், ஸ்ரீநகரில் இருந்து கிட்டத்தட்ட 141 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது. இக்கோயில் இந்திய இராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் உள்ளது. எனவே இந்திய அரசின் முன் அனுமதியைப் பெற்றே இங்கு செல்ல வேண்டும். பலரும் கால்நடையாக அல்லது குதிரைகளின் உதவியுடன் பனிலிங்கத்தை தரிசிக்கின்றனர். மிக ரம்யமான இந்த திருக்கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக வருகின்றனர்.

ஆதார் அட்டை அவசியம்
இந்த ஆண்டும் அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன் முதல் கட்ட நடவடிக்கையாக யாத்திரை வரும் பக்தர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையை வழங்க வேண்டும் என ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் இல்லாமல் தாமாக முன்வந்து ஆதார் அங்கீகாரத்தை சமர்பிக்க வேண்டும் எனவும் மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications