சர்ச்சையில் நாளந்தா பல்கலை நிதி. வேந்தர் பதவியில் இருந்து விலகுவதாக அமர்த்தியா சென் மிரட்டல்!
டெல்லி: சர்வதேச நாளந்தா பல்கலைக் கழகத்துக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலகுவேன் என்று அதன் வேந்தராக இருக்கும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் எச்சரித்துள்ளார்.
குப்த மன்னர்கள் காலத்தில் பீகாரில் நாளந்தா பல்கலைக் கழகம் பெரும் புகழுடன் விளங்கியது. ஏராளமான வெளிநாட்டினரும் நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு வந்து கல்வி கற்று சென்றனர். பின்னர் வெளிநாட்டு மன்னர்கள் படையெடுப்பால் இந்த பல்கலைக் கழகம் சிதைவை சந்தித்தது.
இதே பெயரில் சர்வதேச பல்கலைக் கழகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்த பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று கூறப்பட்டு வருகிறது.
ஆனால் இன்னமும் இந்த பல்கலைக் கழகத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக முடிவடையாமல் டெல்லியில் சிறப்பு அலுவலகம் செயல்பட்டும் வருகிறது.
இந்த பல்கலைக் கழகத்துக்கான செலவினம் இப்போது பெரும் சர்ச்சையை உருவாக்கி வைத்துள்ளது. பல்கலைக் கழகத்தின் வேந்தர் அமர்த்தியா சென் உட்பட நிர்வாகக் குழுவினருக்கு ஒரு ஆண்டுக்கு 80 ஆயிரம் அமெரிக்க டாலர் ஊதியமாக வழங்கப்படுகிறது. பேராசிரியர்களுக்கு ஒரு ஆண்டுக்கு 50ஆயிரம் டாலர்கள் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த விசாரணைக்கு வேந்தர் அமர்த்தியா சென் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்று விசாரணைகளை நடத்தினால் தாம் வேந்தர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் நாளந்தா பல்கலைக் கழகம் தன்னாட்சி பெற்றது எனில் முழுமையான நிதி சுதந்திரமும் அதற்கு இருக்கிறது என்பது பல்கலைக் கழகத்தினர் வாதம். இந்த விவகாரத்தில் விரைவில் மத்திய அரசு முடிவெடுத்து முக்கிய அறிவிப்பை வெளியிடக் கூடும் எனத் தெரிகிறது.