மீண்டும் பாஜக தலைவரானார் அமித் ஷா.. மோடி வாழ்த்து
டெல்லி: டெல்லியில் இன்று நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் தேசிய தலைவராக மீண்டும் போட்டியின்றி அமித் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த ராஜ்நாத் சிங், கடந்த 2014ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து தனது கட்சித் தலைவர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
கட்சி விதிகளின்படி பாஜக தலைவரின் பதவிக் காலம் மூன்று ஆண்டுகளாகும். ராஜ்நாத் சிங் பாஜக தலைவராகப் பொறுப்பேற்ற ஓராண்டில் ராஜினாமா செய்ததால், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு அமித் ஷா தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் அமித் ஷாவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து தலைநகர் டெல்லியில் பாஜகவின் புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அமித் ஷா மீண்டும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யாததால், போட்டியின்றி மீண்டும் ஒருமனதாக அமித் ஷாவே பாஜகவின் தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மோடி வாழ்த்து:
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக அமித் ஷாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் தலைமையில், கட்சி மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தும் என்பதில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக மோடி தனது வாழ்த்துச்செய்தியில் கூறியுள்ளார்.
தமிழிசை மகிழ்ச்சி:
இரண்டாவது முறையாக பாஜகவின் தேசிய தலைவராக அமித் ஷா தேர்வு செய்யப்பட்டிருப்பதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘அமித் ஷா தலைமையில் தமிழக சட்டசபைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்' என நம்பிக்கைத் தெரிவித்தார்.
விஜயகாந்த் வாழ்த்து
இதேபோல தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், 2வது முறையாக பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து செய்தி அனுப்பியுள்ளார்.