தர்மபுரி குழந்தைகள் மரணத்திற்குக் காரணம் மதுவுக்கு அடிமையான இளைஞர்களே...: அன்புமணி
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவமனையில் அதிக அளவில் குழந்தைகள் மரணமடைந்ததுக்குக் காரணம், மதுவுக்கு அடிமையாக உள்ள இளைஞர்கள் தான் எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சரும், அத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.
கடந்த சில நாட்களில் மட்டும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்ட பச்சிளம் குழந்தைகளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று தர்மபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது :-
அதிக குழந்தைகள்...
குழந்தைகள் தொடர் இறப்பு விவகாரத்தில் தருமபுரி அரசு மருத்துவமனை தரப்பில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அதே நேரம் குழந்தைகள் பிரிவில் போதிய மருத்துவர்கள் இருந்தாலும் கூட, அதிக அளவில் சிகிச்சைக்கு குழந்தைகள் வருவதால், அவர்களால் சமாளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
உடனடி நடவடிக்கை தேவை...
எனவே கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை உடனே தமிழக அரசு நியமிக்க வேண்டும். 26 லட்சம் மக்கள் வசிக்கும் தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைதான் உள்ளது.
தர்மபுரியில் எய்ம்ஸ்...
மத்திய அரசு 1500 கோடி ருபாய் மதிப்பீட்டில் மாநிலம் தோறும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனையை தர்மபுரியில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுவின் பிடியில் இளைஞர்கள்...
தர்மபுரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆகிறது. மாவட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் மதுவின் பிடியில் சிக்கியுள்ளனர். மது பழக்கத்தால் இளைஞர்கள் தங்களுடைய கர்ப்பிணி மனைவியைக் கண்டு கொள்வதில்லை. பொருளாதார நெருக்கடியால் கர்ப்பிணிகள் தங்களுடைய உடல்நலம், கருவில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் ஆகியவற்றை பராமரிக்க முடியாமல் போகிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு...
ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கருவில் ஆரோக்கியமற்று வளரும் குழந்தைகள் இறுதியில் எடை குறைவாக அல்லது உடல்நல பாதிப்புடன் பிறந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் கூட இறந்து விடுகின்றன. வெகுவிரைவில் பெண்களைத் திரட்டி தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்தார் அன்புமணி ராமதாஸ்.