ஆந்திராவில் வருது புது KGF! "1000 கிலோ தங்கம் தான் டார்கெட்.." பிரம்மாண்ட பிளான் பக்காவாக ரெடி!
அமராவதி: இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடி மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்கிறார்கள். இதனால் இந்தியப் பொருளாதாரமே அந்நிய செலாவணி சிக்கலை எதிர்கொள்கிறது. இதற்கிடையே அந்த பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், ஆந்திராவில் ஒரு பிரம்மாண்ட தங்கச் சுரங்கம் அமைகிறது. இதில் ஆண்டுக்கு 1000 கிலோ வரை தங்கத்தை உற்பத்தி செய்ய முடியுமாம்!
பேரரசர் அசோகர் காலம் முதல் இன்றைய 'ஆத்மநிர்பர் பாரத்' வரை, இந்தியர்களுக்குத் தங்கம் என்பது வெறும் உலோகமல்ல, அது ஒரு உணர்வு. இதன் காரணமாக நாம் ஒவ்வொரு ஆண்டும் பல நூறு டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இந்தியாவில் தங்கம் இல்லாத நிலையில், நாம் வெளிநாடுகளில் இருந்து இதை வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் அந்நிய செலாவணி பெரியளவில் செலவாகிறது.

தங்கம்
உள்நாட்டில் தங்கத்தை வெட்டி எடுக்க முயன்றால்.. அது இந்தியப் பொருளாதாரத்திற்கே மிகப் பெரியளவில் உதவும். இந்தியாவின் இந்த நீண்டகால தங்கத் தாகத்தைத் தீர்க்கும் வகையில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ஒரு வரலாற்றுச் சாதனை நிகழ்ந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் முதல் பெரிய அளவிலான தனியார் தங்கச் சுரங்கமான 'ஜொன்னகிரி தங்கத் திட்டம்' (Jonnagiri Gold Project) ஆரம்பிக்கவுள்ளது. அடுத்த வாரமே... அதாவது மே முதல் வாரத்தில் தனது உற்பத்தியைத் தொடங்கத் தயாராகிவிட்டது.
ஏன் முக்கியம்
இந்தியா ஆண்டுதோறும் சுமார் 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது. இது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு பெரும் அழுத்தத்தை அளிக்கிறது. இந்தியாவில் தற்போது கர்நாடகாவில் உள்ள ஹட்டி தங்கச் சுரங்கம் மட்டுமே ஆண்டுக்கு 1.5 டன் தங்கத்தை உற்பத்தி செய்கிறது. 2000-ம் ஆண்டில் புகழ்பெற்ற கோலார் தங்க வயல் (KGF) மூடப்பட்ட பிறகு உள்நாட்டுத் தங்க உற்பத்தி கடுமையாகச் சரிந்தது. அந்தப் பெரிய இடைவெளியை இந்த ஜொன்னகிரி சுரங்கம் நிரப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 டன் தங்கம்
சுமார் ₹400 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் இந்த ஜொன்னகிரி திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. கர்னூல் மாவட்டத்தின் ஜொன்னகிரி, எர்ரகுடி மற்றும் பாகிதிராயி ஆகிய கிராமங்களில் 598 ஹெக்டேர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 1,000 கிலோ (1 டன்) தங்கத்தை உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆலையின் கட்டுமானப் பணிகள் வெறும் 13 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..
தங்க உற்பத்தி
தங்க உற்பத்தி என்பது சாதாரண வேலை இல்லை. அது மிகவும் சிக்கலான ஒரு பணியாகும். பாறையிலிருந்து தங்கம் பிரித்தெடுக்கப்படும் முறை பல்வேறு ஸ்டெப்களை உள்ளடக்கியது. முதலில் திறந்தவெளிச் சுரங்கங்களில் பாறைகள் துளையிடப்பட்டு, வெடிவைத்துத் தகர்க்கப்படுகின்றன. பிறகு வெட்டியெடுக்கப்பட்ட தாதுகள் அரைக்கும் இயந்திரங்கள் மூலம் மிக மெல்லிய துகள்களாக மாற்றப்படுகின்றன. புவி ஈர்ப்பு விசை (Gravity separation) மற்றும் கார்பன்-இன்-லீச் (Carbon-in-leach) முறையைப் பயன்படுத்தி, வேதியியல் கரைசல் மூலம் தங்கம் பிரித்தெடுக்கப்படுகிறது. இறுதியாக, அந்த தங்கத் துகள்கள் உருக்கு உலைகள் மூலம் தூய தங்கக் கட்டிகளாக மாற்றப்படுகின்றன.
ஆந்திராவில் அமையும் இந்த தங்கச் சுரங்க திட்டம் வெற்றி பெற்றால் அது இந்தியாவின் தங்க உற்பத்தியைப் பெரியளவில் அதிகரிக்கும். மேலும், இது சுற்றியுள்ள கிராமங்களில் கல்வி, சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மே மாதம் இந்தத் திட்டத்தைத் தேசத்திற்கு அர்ப்பணிக்க உள்ளார்.
இந்தியாவுக்கே நல்லது
தங்கம் இறக்குமதிக்காக இந்தியா செலவிடும் கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்த இது ஒரு சிறிய தொடக்கமே. "இந்தியா அடுத்த பத்து ஆண்டுகளில் ஆண்டுக்கு 50 முதல் 100 டன் தங்கம் உற்பத்தி செய்வதை இலக்காகக் கொள்ள வேண்டும்" என்கிறார்கள் இத்துறை வல்லுநர்கள். இந்தியாவின் தாதுச் செல்வத்தை நாம் திறம்படப் பயன்படுத்தினால், இறக்குமதி பெரியளவில் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை














Click it and Unblock the Notifications