ஆணவக்கொலை- ஆந்திராவில் பிறந்த குழந்தையோடு வந்த மகளை கொன்று வீசிய பெற்றோர்
சித்தூர்: சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை ஆணவக்கொலை செய்வது நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேறு சாதி இளைஞரை திருமணம் செய்த பெண்ணை பெற்றோரே அடித்துக்கொன்று கால்வாயில் வீசியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு குழந்தை பிறந்து ஏழேநாள் ஆகியுள்ளது என்பதுதான் சோகம்.
கொலைசெய்யப்பட்ட பெண்ணின் பெயர் ஹேமாவதி. இவர் பாஸ்கர் நாயுடு வரலட்சுமி என்பவரின் மகளாவார். ஹேமாவதியை பெற்றோர் செல்லமாக வளர்த்தனர். திருமண வயது வந்த உடன் ஹேமாவதிக்கு வேறு சாதியைச் சேர்ந்த கேசவலு மீது ஆசை ஏற்பட்டது. கேசவலு தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் ஹேமாவதியின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.

பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். வெளியூரில் கண்காணாமல் வசித்து வந்த இந்த காதல் தம்பதியினருக்கு வாரிசு உருவானது.
குழந்தை பிறந்த பின்னர் பெற்றோரை சமாதானம் செய்து விடலாம் என்று ஹேமாவதி நினைத்தார். பெற்றோர் தனக்கு வளைகாப்பு செய்து வைப்பார் என்று நம்பினார் அது நடக்கவில்லை. கடைசியில் குழந்தை பிறக்கும் நாளும் வந்தது.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஹேமாவதியை காண ஆசைப்பட்ட கேசவலுவின் பெற்றோர் சொந்த ஊருக்கு வரவழைத்தனர். தங்கள் வீட்டில் வைத்திருந்த நிலையில் ஹேமாவதிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பலமனேரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த தகவல் ஹேமாவதியின் பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. தங்களை அசிங்கப்படுத்திவிட்டு திருமணம் செய்து கொண்ட இருவரையும் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று பேசி வந்தனர். நேற்று மாலை மருத்துவமனையில் இருந்து ஹேமாவதி வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அந்த ஆட்டோவை திடீரென ஒரு கும்பல் வழி மறித்தது. அது யார் என்று ஹேமாவதி பார்த்த போது அவரது தந்தையும் உறவினர்களும் நின்று கொண்டிருந்தனர். தன்னை அழைத்துப்போகத்தான் வந்திருக்கின்றனர் என்று நினைத்தார் ஹேமாவதி ஆனால் நடந்தது வேறு. இருவரையும் இழுத்துப்போட்டு அடித்தனர்.
பிள்ளை பெற்ற பச்சை உடம்பு பெண் என்றும் பாராமல் அடித்து கொன்று அருகில் இருந்த கால்வாயில் வீசிச் சென்றனர். பிறந்த குழந்தையை வீசிவிட்டு சென்றனர். சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டனர். ஹேமாவதியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைச்சம்பவத்தால் கோபம் கொண்ட கேசவலு குடும்பத்தினர் ஹேமாவதி பெற்றோரின் வீட்டை சூறையாடியதோடு வீட்டிற்கு தீவைத்து எரித்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆணவக்கொலை மற்றும் தீவைப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். கேசவலு அளித்த புகாரின் பேரில் ஹேமாவதியின் பெற்றோரை கைது செய்தனர்.
கடந்த சிலவாரங்களுக்கு முன்பு சாதி மாறி திருமணம் செய்த பெண்ணையும், ஆணையும் ஹைதராபாத்தில் நடுரோட்டில் ஓட ஓட வெட்டினர். சில தினங்களுக்கு முன் சினிமா பாணியில் கர்ப்பிணிப் பெண்ணை பெண்ணின் சகோதரர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இந்த அதிர்ச்சி சம்பவங்கள் நீங்கும் முன்பாக பெண்ணை கொன்று கால்வாயில் வீசிய சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications