ஜெகன் அதிரடி- 35 வேட்பாளர்கள் அறிவிப்பு-13 எம்எல்ஏக்களுக்கு நோ சீட்- 27 வாரிசுகளுக்கு புது பொறுப்பு!
விசாகப்பட்டினம்: ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் 35 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த வேட்பாளர்கள் பட்டியலில் 13 சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இடம் பெறவில்லை. அதேநேரத்தில் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களின் 27 வாரிசுகளுக்கு புதிய பொறுப்புகளையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திரா முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தில் மொத்தம் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 88 இடங்கள். 2019 சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 151 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில்தான் வென்றது. ஆந்திரா மாநில சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது.

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்குதேசம், ஜனசேனா, பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் களத்தில் உள்ளன. ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இந்திய தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன.
தெலுங்கானா பாடம்: அண்டை மாநிலமான தெலுங்கானாவில் 2 முறை ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் கட்சி தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இந்த தோல்விக்கு காரணமே சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் மீண்டும் சீட் கொடுத்ததுதான் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா தேர்தலில் வெற்றி வாய்ப்பு சந்தேகமாக இருக்கக் கூடிய சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கும் இந்த முறை போட்டியிட வாய்ப்பு இல்லை என முன்னரே தெரிவித்துவிட்டராம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. தற்போதைய நிலையில் 80-க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை என முடிவெடுத்துள்ளாராம் ஜெகன் மோகன் ரெட்டி.
வேட்பாளர்கள் பட்டியல்- 13 பேருக்கு சீட் மறுப்பு: இதனை உறுதிப்படுத்தும் வகையில் வேட்பாளர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திரா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் கட்டியலை டிசம்பர் 11-ல் ஜெகன் மோகன் ரெட்டி வெளியிட்டார். 2-வது வேட்பாளர் பட்டியலை கடந்த 2-ந் தேதி வெளியிட்டிருந்தார். 11 பேர் கொண்ட முதலாவது வேட்பாளர் பட்டியலில் 3 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் சீட் தரப்படவில்லை. 2-வது கட்டமாக 24 வேட்பாளர்களை அறிவித்தார் ஜெகன். இதில் 10 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரவில்லை. மொத்தம் 35 வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில்13 சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.
ஷர்மிளாவுடன் காங்கிரஸுக்கு தாவல்?: ஜெகன் கட்சியில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்களில் பலர் கடும் அதிருப்தியில் இருக்கின்றனராம். இவர்கள் ஜெகனின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, காங்கிரஸில் இணையும் போது அவருடன் காங்கிரஸ் கட்சிக்கு தாவும் முடிவிலும் இருக்கின்றனராம். இதனையும் எதிர்பார்த்துதான் ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமான முடிவெடுத்திருக்கிறாராம்.
27 வாரிசுகளுக்கு பொறுப்பு: இதனிடையே கட்சியின் சீனியர் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களின் வாரிசுகள் 27 பேருக்கு புதியதாக தொகுதிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை அறிவித்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. பொதுவாக வாரிசு அரசியல் என்பது கடுமையாக விமர்சிக்கப்படும் நிலையில் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் 175 தொகுதிகளிலும் வெல்வதே இலக்கு என்ற பாதையில் ஜெகன் மோகன் ரெட்டி விறுவிறுவென முன்னெஎறி வருகிறார் என்கின்றன ஆந்திரா அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications