நூலிழையில் தப்பினார் சந்திரபாபு நாயுடு.. வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது திடீரென வந்த ரயில்.. பரபர
அமராவதி: ஆந்திராவில் இப்போது வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வருகிறார். இதற்கிடையே விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரயில் விபத்தில் நூலிழையில் எஸ்கேப் ஆகியுள்ளார்.
நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் இரு மாநிலங்களிலும் பல்வேறு இடங்களிலும் மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகளைச் சீர் செய்யும் நடவடிக்கைகளிலும் மக்களை மீட்கும் நடவடிக்கைகளிலும் இரு மாநில அரசுகளும் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சந்திரபாபு நாயுடு: ஆந்திராவில் வெள்ளம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களுக்கும் சந்திரபாபு நாயுடு நேரில் சென்று பாதிப்புகளைப் பார்வையிட்டு வருகிறார். மேலும், மீட்புப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறார். அதன்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று விஜயவாடா அருகே வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து வந்தார்.
திடீரென வந்த ரயில்: அப்போது சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுடன் ரயில்வே பாலத்தில் சென்று வெள்ளத்தைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அந்த பாதையில் ரயில் வந்துவிட்டது. ரயில் மிக அருகே வந்துவிட்டதால் சந்திரபாபு நாயுடுவால் பாலத்தை விட்டு இறங்க முடியவில்லை. இதையடுத்து தண்டவாளத்திற்கு அருகே பாலத்தில் ஓரமாக நின்றார். அதிகாரிகள் அவரது பாதுகாப்பை உறுதி செய்தனர். இதையடுத்து ரயில் அவர்களைப் பாதுகாப்பாகக் கடந்து சென்றது.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு மிக அருகே இந்த ரயில் சென்றதால் அங்கிருந்த அதிகாரிகள் பதற்றமடைந்தனர். இருப்பினும், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்த நிலையில், ரயில் பாதுகாப்பாகக் கடந்து சென்றது. அதிகாரிகள் பதற்றமாக இருந்தாலும் கூட சந்திரபாபு நாயுடு நிதனமாகவே இருந்தார். அவர் அதன் பின்னரும் வெள்ள பாதிப்புகளைத் தொடர்ச்சியாக ஆய்வு செய்தார்.
ஆந்திரா வெள்ளம்: ஆந்திராவில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு வெள்ளம் பாதித்த மாவட்டங்களுக்கு மத்திய அரசின் குழு நேரில் சென்று ஆய்வு செய்கிறது. சஞ்சீவ் குமார் ஜிண்டால் தலைமையிலான குழு முதற்கட்டமாக விஜயவாடாவுக்கு சென்று, இழப்புகள் மற்றும் பாதிப்புகளை மதிப்பிட்டனர். மேலும், ஆந்திரப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அலுவலகம் தாடேபள்ளியில் உள்ளது. அதையும் மத்திய அரசு குழு நேரில் ஆய்வு செய்தது.
தொடர்ந்து மத்திய அரசு அதிகாரிகள் பிரகாசம் தடுப்பணையைப் பார்வையிட்டனர். அங்குச் சமீபத்தில் கொட்டிய கனமழையால் மூன்று பெரிய படகுகள் மோதியதில் கான்கிரீட் பீம் சேதமடைந்து இருக்கும் நிலையில், அதையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்..
ஆந்திரா வெள்ளம்: வசமாக சிக்கிய மத்திய அரசு.. தேசிய பேரிடராக அறிவிக்காதா? ஆட்சியை கவிழ்ப்பாரா நாயுடு?
ஓய்ந்த மழை: ஆந்திராவில் கடந்த சில வாரங்களாகக் கொட்டி தீர்த்த மழையால் பாதிப்புகள் மிக மோசமாக இருக்கிறது. இப்போது மழை சற்றே ஓய்ந்து இருக்கும் நிலையில், பல இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. மழைநீருடன் சில இடங்களில் கழிவு நீரும் கலந்துள்ளதால் வைரஸ் பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விஜயவாடா மாநகராட்சி பணியாளர்கள் இப்போது துப்புரவுப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், நீரிலும் அதிகளவில் வண்டல் மண் கலந்துள்ளதால், அதைச் சுத்தம் செய்யும் பணிகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், இப்போது குழாய் நீர் பயன்படுத்தவே முடியாத நிலையில் இருப்பதால் மக்கள் அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று விஜயவாடா நகராட்சி ஆணையர் எச்.எம்.தியானசந்திரா தெரிவித்துள்ளார். இது குறித்து மக்களிடையே தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விரைந்து வண்டல் மண்ணை சுத்தப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications