மின்னணு பரிவர்த்தனைக்கு ஏழைகளுக்கு இலவச செல்போன் - ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு
நாடு முழுவதும் பணமில்லா பரிவர்த்தனை செய்ய வசதியாக ஏழைகளுக்கு இலவச செல்போன் அளிக்க ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.
விஜயவாடா: பணமில்லா பரிவர்த்தனை செய்ய வசதியாக ஆந்திராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்களுக்கு இலவச செல்போன் வழங்கப் போவதாக முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பால் நாடு முழுவதும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்னை குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், பிரச்னை தீரும்வரை தொடர்ச்சியாக நிலைமையை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது ரிசர்வ் வங்கி அதிகாரிகள், ஆந்திராவுக்கு நவம்பர் 28ம் தேதி கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய ரூபாய் நோட்டுகள் வர உள்ளது. இதில் ரூ.60 கோடி மதிப்பிலான நோட்டுகள் சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் என்று தெரிவித்தனர்.
மின்னணு பணபரிமாற்றம்
இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், ஆந்திரா முழுவதும் பணம் இல்லாமல் பரிவர்த்தனை செய்யும் வசதியை அமல்படுத்த வேண்டும் என்றார். ஏழை, எளிய மக்களும் பழைய ரூபாய் நோட்டு விவகாரம் போன்று இனிமேலும் அவதிப்படாமல் இருக்க பணமில்லா பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
காகிதமில்லா பணபரிமாற்றம்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், காகிதமில்லா பணபரிமாற்றத்துக்கு குறைந்தபட்சம் செல்போன் தேவை என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால், இந்த புதிய திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார். பழைய நோட்டுக்கள் விவகாரத்தில் ஏழைகள் அவதிப்படாமல் இருக்க பணம் இல்லாமல் மின்னனு முறையில் பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதற்கு வசதியாக ஏழை மக்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்றும் கூறினார்.
மாநில முதல்வர்கள் நடவடிக்கை
பணத்தட்டுப்பாடு பிரச்சினையால் மக்கள் நாடு முழுவதும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். அந்தந்த மாநில முதல்வர்கள், இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரச்சினை தீர்க்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் இலவச செல்போன்
தமிழக மக்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்று ஏற்கனவே ஜெயலலிதா அறிவித்துள்ளார். இப்போது மின்னணு பண பரிமாற்றத்திற்கு மக்கள் மாறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சந்திரபாபு நாயுடு போல முதல்வர் ஜெயலலிதாவும் இலவச செல்போன் வழங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.