அங்கன்வாடியை ஆய்வு செய்ய குடித்துவிட்டு வந்த அதிகாரி கைது
கொழிஞ்சாம்பாறை: கேரளாவில் அங்கன்வாடியை ஆய்வு செய்ய குடிபோதையில் வந்த அதிகாரியால் மக்கள் கொதிப்படைந்தனர்.அவரை போலீஸிலும் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் மறையூர் அருகே உள்ளது காந்தலூர் கிராமம். இந்த பஞ்சாயத்து பகுதியில் உள்ள பயஸ்நகர் என்ற இடத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது.
இந்த அங்கன்வாடியை ஆய்வு செய்யவும் ஊழியர்கள் சரியாக பணிபுரிகிறார்களா என்பதை ஆராய தேவிகுளம் சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அதிகாரி பாபுராஜ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
சம்பவத்தன்று அவர் அந்த அங்கன்வாடியை ஆய்வு செய்ய வருவதாக இருந்தது. சற்று தாமதமாக வந்த அவரது நடையில் மாற்றங்கள் தெரிந்தது. மது போதையில் இருந்த அவர் தள்ளாடியபடி அங்குவந்தார். திடீரென அவர் அங்கன்வாடி குழந்தைகளை வெளியே செல்லுமாறு விரட்டியடித்தார்.
பின்னர் அங்கு கிடந்த கட்டிலில் கம்பளி போர்வையை விரித்துபடுத்து தூங்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து அங்கன்வாடி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது தொடர்பான தகவல் ஊர் பொதுமக்களிடம் பரவியது. இதைத் தொடர்ந்து அங்கன்வாடியில் கூடிய பொதுமக்கள் அதிகாரியை எழுப்பி பார்த்தனர். ஆனால் முடியவில்லை. இதனால், போதையில் இருந்த அதிகாரியை பற்றி மறையூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போதையில் இருந்த பாபுராஜை மறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பாபுராஜுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் அவர் மதுபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து பாபுராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications