தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் ஆட்சியை கலைக்க வேண்டும்.. விலங்குகள் நலவாரியம் போர்க்கொடி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் ஆட்சியை கலைக்க வேண்டும் என விலங்கள் நலவாரியம் கூறியுள்ளது.
டெல்லி: தமிழகத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. நிலுவையில் உள்ள இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீர்ப்பை உடனடியாக வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனால் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ளது. சேலம், நாகை, தேனி, மதுரை, கோவை, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், பேரணி, முற்றுகைப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விலங்குகள் நலவாரிய உறுப்பினர்கள் கடிதம் எழுதி உள்ளனர். ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது காவல்துறையின் கடமை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.