விசாரணைக்கு அழைத்து சென்று 7 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர போலீஸ்!; தப்பி வந்த தமிழர் ‘திடுக்’
திருப்பதி: செம்பரம் கடத்தல் தொடர்பாக விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட 7 தமிழர்களை ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்று விட்டதாக அங்கிருந்து தப்பி வந்த தமிழர் ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செம்மரம் வெட்டிய 20 அப்பாவித் தமிழர்கள் நேற்று ஆந்திரா வனப்பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது திட்டமிட்ட என்கவுண்டர் என்று புகார் எழுந்துள்ள நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக தப்பி வந்த தமிழர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளிகள் சுட்டுக்கொலை
திருப்பதி அருகே சித்தூரில், சந்திரகிரி மண்டல் பகுதியில் அமைந்துள்ள சீகடிகோணை, ஈதகுண்டா (ஸ்ரீவாரிமெட்டு) என்னும் 2 இடங்களில் சுமார் 200 பேர் செம்மரங்களை வெட்டிக்கொண்டிருப்பதாக சிறப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும், செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்ததாகவும், அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்ததாகவும், இதில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் தப்பிவிட்டதாகவும் ஆந்திரா காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த மோதலில் 9 காவல்துறையினர் காயம் அடைந்ததாகவும் கூறிய போலீசார் பலியானவர்களில் 20 பேரும் தமிழர்கள் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருத்தணி தமிழர்கள்
இந்நிலையில், திருத்தணியில் இருந்து 7 பேரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஆந்திர காவல்துறையினர் சுட்டுக் கொன்றதாக தப்பி வந்த தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உதவி மையம்
இதனிடையே, 20 பேரின் உடல்கள் திருப்பதி ருய்யா அரசு மருத்துவமனையில் இன்று காலை பிரேத பரிசோதனை நடைபெற்றது. மருத்துவமனையை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் உறவினர்கள் யாரும் உடலை வாங்க இதுவரை வரவில்லை. இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் உதவி மையத்தை ஆந்திர அரசு அமைத்துள்ளது.

போலி என்கவுண்டர்
இந்நிலையில், தெலுங்கு மனித உரிமை அமைப்பினர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்பி சின்ஹா மோகன் ஆகியோர் இன்று மருத்துவமனை வளாகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சின்ஹா, காவல்துறையினர் நடத்தியது போலி என்கவுண்டர் என்றும், இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் புகார்
இதனிடையே மருத்துவமனை வளாகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காவல்துறையினர் நடத்தியது போலி என்கவுன்டர் என்றும், காவல்துறையினரின் இந்த நடவடிக்கையால் இருமாநிலத்தின் நல்லுறவு பாதிக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

போலி என்கவுண்டர்
மரம் வெட்டியவர்களை சுட்டுக்கொன்றதாக போலீசார் கூறிவந்த நிலையில், தமிழகர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்று கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளதால் பரபரப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications