சீன எல்லையில் சிக்கி தவித்த 4,100 சுற்றுலா பயணிகள்... அதிரடியாக மீட்டு பாராட்டை பெற்ற ராணுவம்
காங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் கடும் பனிப்பொழிவில் சிக்கி தவித்த 4,100 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் அதிரடியாக மீட்டுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தின் கிழக்கு சிக்கிம் மாவட்டம் சீன எல்லையையொட்டி அமைந்துள்ளது. அங்குள்ள சிறந்த சுற்றுலா தலமான நாதுலா கணவாய், கடல் மட்டத்தில் இருந்து 4,310 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அந்த கணவாய் பகுதியை பார்வையிடுவதற்காக நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளன. எனவே அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4,100 சுற்றுலா பயணிகள் 569 வாகனங்களில் நாதுலா கணவாய்க்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் ஜவஹர்லால் நேரு சாலை வழியாக திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கடும் பனிப்பொழிவால் சாலையில் பல அடி உயரத்துக்கு பனித் துகள்கள் நிரம்பி இருந்தது. ஆகையால் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவற்றில் இருந்த சுற்றுலா பயணிகள் கடும் குளிராலும், போதிய உணவு இல்லாமலும் கடும் அவதிப் பட்டனர்.
இது குறித்து ராணுவத்துக்கு தகவல் அளிக்கப்பட, அதிரடியாக களத்தில் குதித்த ராணுவ வீரர்கள், சுற்றுலா பயணிகளை மீட்கும் பணியில் இறங்கினர். நவீன எந்திரங்கள் மூலம் சாலையில் இருந்த பனித்துகள்களை அகற்றிய அவர்கள், பின்னர் சுற்றுலா பயணிகளை முகாம்களுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, மருந்து பொருட்கள், போர்வைகள் வழங்கப்பட்டன. பின்னர் அவர்களை தலைநகர் காங்டாக்குக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, காலநிலை சீராகும் வரை ஜவஹர்லால் நேரு சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகளில் 99 பேர் வெளிநாடுகளை சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்டவர்களில் சிலர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், மீட்புப்பணியில் பொது மக்களும், மாநில அரசு அதிகாரிகளும் ஈடுபட்டதாகவும் சிக்கிம் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.