கண்ணகி கோவில் சித்திரை திருவிழா: குவியும் தமிழக - கேரள பக்தர்கள்
இடுக்கி: தமிழக - கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் இன்று சித்ரா பவுணர்மி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இரு மாநில பக்தர்களும் அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர்.
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு கூடலூருக்கு தெற்கே தமிழக-கேரள எல்லையில் உள்ள வண்ணாத்தி பாறையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்டதுதான் கண்ணகி கோவில்.
இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பவுர்ணமி நாளன்று மங்கலதேவி என்ற கண்ணகிக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த கண்ணகி கோவில் விழாவில் இரு மாநிலத்தை சேர்ந்த பக்தர்களும் திரளாக பங்கேற்கின்றனர்.
சிறப்பு அலங்காரத்தில் கண்ணகி
இந்த ஆண்டுக்கான சித்திரா பவுர்ணமி திருவிழா இன்று தொடங்கியுள்ளது. அதிகாலை 5.30 மணிக்கு மங்கலதேவி கண்ணகிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. 6 மணிக்கு புஷ்ப அலங்காரம் நடந்தது.
நடைபாதை பயணம்
5 ஆயிரம் அடி மலை உயரத்தில் இருக்கும் கண்ணகி கோவிலுக்கு தமிழக பக்தர்கள் கூடலூர் அருகே உள்ள பளியங்குடி வரை ஜீப்புகளில் வந்தனர். பின்னர் அங்கிருந்து மலை வழியாக சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் நடந்து கோவிலுக்கு சென்றனர்.
கேரளா பக்தர்கள்
கேரள பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் குமுளி வழியாக கண்ணகி கோவிலுக்கு வந்தனர். குமுளியில் இருந்து கண்ணகி கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் கொக்கரக்கண்டம் என்னும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு பல மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது. போலீசார் முழுவீச்சில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.
சாலை வசதியில்லையே
தமிழக-கேரள எல்லையில் கோவில் அமைந்து உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு காரணமாக பக்தர்கள் மிகுந்த சிமரப்பட்டனர். ஆண்டு தோறும் நடக்கும் இந்த திருவிழாவில் கலந்துகொள்ள கூடலூரில் இருந்து சாலை வசதி செய்துதர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
அணை பிரச்சினை
முல்லை பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக பதட்டமான சூழல் நிலவுவதால் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களை சேர்ந்த சுமார் 1000 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
1000 போலீசார் பாதுகாப்பு
திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. அறிவுச்செல்வம் தலைமையில் 1 எஸ்.பி., 4 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 460 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் சார்பில் இடுக்கி மாவட்ட எஸ்.பி. அலெக்ஸ் வர்க்கீஸ், 4 டி.எஸ்.பி., 8 சப்-இன்ஸ்பெக்டர்கள், 25 கூடுதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 504 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.