இந்திய பொருளாதார வளர்ச்சி சிறப்பாக உள்ளது.. ரேட்டிங்கை ஏற்றிய மூடி'ஸ்.. உற்சாக மூடில் ஜெட்லி!
டெல்லி: சர்வதேச பொருளாதார தரமதிப்பீட்டு நிறுவனமான மூடி'ஸ், இந்திய பொருளாதாரத்தை பாராட்டியிருப்பதாகவும், இது பிரதமர் மோடி அரசின் சீர்த்திருத்துங்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச பொருளாதார தரமதிப்பீட்டு நிறுவனமான மூடி'ஸ், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என கணித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நம்பகத்தன்மை, Baa3யில் இருந்து Baa2 ஆக அதிகரித்து அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா கடன் மற்றும் முதலீடு பெறுவது எளிதாகும் என கூறப்படுகிறது.
டெல்லியில் இன்று செய்தியாளர் சந்திப்பில் ஜெட்லி மேலும் கூறுகையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பொருளாதார தர நிர்ணயத்தை மூடி'ஸ் உயத்தியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தங்களின் பலனாக இந்த பயனை இந்தியா எட்டியுள்ளது.
பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஆதாரை கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவற்றின் காரணமாக இந்திய பொருளாதாரம் புதிய உத் வேகத்தை எட்டியுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்தியா மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக மாறியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை குறை கூறியவர்கள், இப்போது தங்களது கருத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, மூடி'ஸ் ரேட்டிங்கின் தாக்கம் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தன. இன்று காலை முதலே மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும், தேசிய பங்குச்சந்தையில் உயர்வு காணப்பட்டது. அதிலும் வங்கித்துறை மற்றும் நிதித்துறை பங்குகள் உயர்வை சந்தித்தன.
அதேநேரம், மூடி'ஸ் கூறுவதற்கு நேர் எதிரான சூழலே இந்தியாவில் உள்ளது என்று காங்கிரஸ் குறை கூறியுள்ளது.