மணிப்பூரைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது நாகா தீவிரவாதிகள் தாக்குதல்!
இடாநகர்: மணிப்பூரைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது நாகா தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் 4 தீவிரவாத இயக்கங்கள் கூட்டாக இணைந்து கடந்த வியாழன்று ராணுவ வாகனம் மீது தாக்குதல் நடத்தின. இதில் 18 ராணுவத்தினர் பலியாகினர். கடந்த 20 ஆண்டுகாலத்தில் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் ராணுவத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப் பெரிய தாக்குதல் இது.

தீவிரவாத குழுக்கள் கூட்டாக இணைந்து நடத்திய இத்தாக்குதல் ராணுவத்தினரையும் உளவுத்துறையினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. இந்த நிலையில் அருணாசலப் பிரதேசத்திலும் ராணுவ முகாம் மீது நாகா தீவிரவாதிகள் இன்று திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அருணாசலப் பிரதேசத்தின் திராப் மாவட்டத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையினரின் முகாம் மீது நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் (கப்லாங்) தீவிரவாதிகள் நவீன ஆயுதங்களுடன் இத்தாக்குதலை நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இருப்பினும் இந்த மோதலில் ராணுவத்தினருக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ராணுவத்தினர் மீது அடுத்தடுத்து தீவிரவாதிகள் தாக்குதல்கள் நடத்துவதன் பின்னணியில் சீனா இருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து நாகாலாந்தை தனிநாடாக்க கோரி நாகா தீவிரவாதிகள் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications