டெல்லி மின்தடை: நேரில் சந்திக்க முடியாததால் மோடிக்கு கடிதம் எழுதிய கெஜ்ரிவால்
டெல்லி: டெல்லியில் நிலவும் மின்தடை தொடர்பாக, முதலில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேச ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் திட்டமிட்டார். ஆனால், அதற்கான அனுமதி கிடைக்கப் பெறாததால் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார் கெஜ்ரிவால்.
தலைநகர் டெல்லியை சமீபத்தில் தாக்கிய கடும் சூறாவளியில் மின்வடங்கள் கடுமையாக பாதிப்புக்கு ஆளாகின. இதனால் ஏற்பட்ட மின் தடையால் டெல்லி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கிடையே கடந்த 62 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டெல்லியில் அதிகபட்ச வெயில் கடந்த சில நாட்களாக பதிவாகியுள்ளது. இதனால், வெளியிலும் செல்ல முடியாமல் வீட்டிலும் இருக்க முடியாமல் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தங்களது ஆட்சியின் போது தடையற்ற மின்சாரம் வழங்கப் பட்டதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி மின்வெட்டைக் கண்டித்து ஆம் ஆத்மியினர் போராட்டம் நடத்தினர்
இந்நிலையில், இந்த மின்தடை தொடர்பாக இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முறையிட ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் முடிவெடுத்தார். நேற்று இரவு நடைபெற்ற அக்கட்சியின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்களில் ஒருவரான சஞ்செய் சிங் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்கி தர அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால், கெஜ்ரிவாலுக்கு அனுமதி கிடைப்பதற்கான சாத்தியம் எதுவும் தென்படவில்லை.
இதனால், தன் நேரில் கூற நினைத்தவற்றை கடிதம் வாயிலாக மோடிக்கு தெரியப் படுத்த கெஜ்ரிவால் முடிவு செய்தார். அதன்படி, அவர் கடிதமொன்றை எழுதி மோடிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர், ‘ டெல்லியில் தற்போது உள்ள மின் தடை காரணமாக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லியில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி இருப்பதால், பிரதமர் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று டிவிட்டரில் கருத்து தெரிவித்து இருந்த அரவிந்த் கெஜ்ரிவால், மின் பிரச்சினையை பாரதீய ஜனதா கையாள வேண்டும். இல்லையென்றால் அரசு அமைக்க வேண்டும் இல்லையென்றால் டெல்லியில் தேர்தல் நடைபெற அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
கடந்தாண்டு நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்திருந்தது ஆம் ஆத்மி. ஆனால், 49 நாட்கள் மட்டுமே ஆட்சியை நடத்தி விட்டு ஜன்லோக்பால் மசோதா காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார் கெஜ்ரிவால்.
அதனைத் தொடர்ந்து பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப் பட்டிருந்த மோடிக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியை சந்தித்தவர் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.