காற்று மாசுபாட்டை குறைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசிடம் ஆதரவு கேட்கும் டெல்லி முதல்வர் !
டெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் தனியார் வாகனங்களுக்கான கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதால் மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லியில் கடுமையான காற்று மாசுப்பாடு நிலவுகிறது. இதை குறைக்க பல்வேறு நடவடிகைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக டெல்லி அரசு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்படி ஒற்றைப்படை பதிவு எண்களை கொண்ட கார்களை திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் இயக்க வேண்டும். அதேபோல் இரட்டைப்படை எண்களை கொண்ட கார்கள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கார்களையும் இயக்கலாம்.

இந்த திட்டம் ஜனவரி 1-ம் தேதி முதல் 15 நாட்களுக்கு அமல்படுத்தப்படும் என்றும், ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இத்திட்டம் கைவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இந்த திட்டத்தை அமல்படுத்த ஆதரவளிக்கும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். அருண் ஜெட்லி மீது ஊழல் புகார் கூறிவருவது உட்பட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் பொதுவான பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications