பலாத்கார வழக்கில் சாட்சியாக இருந்த ஆசாராம் பாபுவின் சமையல்காரர் சுட்டுக் கொலை
லக்னோ: பாலியல் வழக்கில் சிறையில் இருக்கும் சாமியார் ஆசாராம் பாபுவின் சமையல்காரரும், உதவியாளருமான அகில் குப்தா உத்தர பிரதேசத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சமைல்காரராகவும், உதவியாளராகவும் இருந்தவர் அகில் குப்தா(35). அகில் அண்மையில் தான் உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜன்சாத் ரோட்டில் புதிய வீடு கட்டி குடியேறினார்.
மேலும் அவர் மீனாக்ஷி சவுக்கில் உள்ள கங்கா பிளாசாவில் பால் கடை வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் கடையில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அகிலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
ஆசாராம் பாபுவும், அவரது மகன் நாராயண் சாயும் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் போலீசில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் அகில் குப்தா காந்திநகர் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் ஆசாராம் பாபுவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.
அகில் ஆசாராம் பாபுவின் அகமதாபாத் ஆசிரமத்தில் தான் சமையல்காரராக இருந்தார். அண்மையில் தான் அவர் முசாபர்நகர் வந்தார். முசாபர்நகரில் அவருக்கு எதிரிகள் இல்லை என்றும், ஆசாராம் பாபுவுக்கு எதிராக சாட்சியம் அளித்ததால் தான் அவர் கொலை செய்யப்பட்டார் என்றும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.