4 மாநிலத் தேர்தல் தோல்வி எதிரொலி: மீண்டும் கட்சி நிர்வாகத்தில் ஈடுபட சோனியா முடிவு
டெல்லி: நான்கு மாநில சட்டசபைத் தேர்தலில் தனது கட்சிக்கு பெரும் சரிவும், தோல்வியும் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மீண்டும் கட்சி நிர்வாகத்தில் தானே தலையிடத் தொடங்கி விட்டாராம்.
சிறிது காலமாக அவர் உடல் நலக் குறைவு மற்றும் ராகுல் காந்தியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தது உள்ளிட்ட காரணங்களால், நிர்வாகப் பணிகளில் தானே நேரடியாக தலையிடாமல் இருந்தார். தற்போது சட்டசபைத் தேர்தல் தோல்வி அவரை மீண்டும் கட்சி விவகாரங்களுக்கு நேரடியாக இழுத்து வந்துள்ளது.
அவசர ஆலோசனை....
கடந்த திங்கள்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம் குறித்து உயர் மட்டத் தலைவர்களுடன் சோனியா காந்தி அவசர ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது பொதுச் செயலாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள் தங்களது அறிக்கையை சோனியா காந்தியிடம் தாக்கல் செய்தனர்.
பெருத்த ஏமாற்றம்....
தேர்தல் முடிவுகள் குறித்து அவர்கள் சோனியாவிடம் கருத்து தெரிவிக்கையில், இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தைத் தருவதாக கூறினார்களாம்.
சிறிய ஆறுதல்....
டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர் ஆகிய நான்கு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. மிஸோரமில் மட்டுமே அக்கட்சிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சரவைக் கூட்டங்கள் ரத்து...
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் முக்கியமான அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட ரத்து செய்து விட்டு வந்தார்களாம்.
ராஜினாமா முடிவு....
இந்தக் கூட்டத்தில், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தேர்தல் பொறுப்பாளர்ளும், செயலாளர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்து சோனியா காந்தி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லையாம்.
ராகுல்காந்தி தலைமையில்....
ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு அமர்த்தப்பட்டது முதலே சோனியா காந்தி, கட்சி நிர்வாகத்தை நேரடியாக கவனிப்பதில்லை. மேலும் ராகுல் காந்தியையே முற்றிலும் சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருந்தார். முக்கிய முடிவுகளையும் கூட ராகுல் காந்தியே எடுக்கவும் அனுமதித்தார்.
தேர்தல் பிரச்சாரம்....
நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தலின்போதும் கூட அவர் மொத்தமே ஐந்து கூட்டங்களில்தான் பேசினார். அதேசமயம், ராகுல் காந்தி 25 கூட்டங்களில் பேசியிருந்தார்.
தோல்விப் பாடம்....
தற்போது ராகுல் காந்திக்குத்தான் இந்த தேர்தல் தோல்வி தொடர்பாக விளக்கம் அளிக்கும் முக்கியப் பொறுப்பு இருக்கிறது. இருப்பினும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்திக்கவில்லை. மாறாக சோனியா காந்திதான் சந்தித்து விளக்கம் அளித்தார். தோல்வியையும் ஒப்புக் கொண்டார். ராகுல் காந்தி, மக்கள் தங்களுக்கு சில பாடங்களைக் கற்றுக் கொடுத்ததாக மட்டும் கூறினார்.
பின்னடைவுக்கான காரணம்....
இதற்கிடையே ,லேப்டாப் சகிதம் ராகுல் காந்தி அரசியல் நடத்துவது சரிவராது, காலத்திற்கு ஒவ்வாதது என்று காங்கிரஸ் கட்சியினரே கூற ஆரம்பித்துள்ளனர். அடுத்த 15 ஆண்டுகள் குறித்து ராகுல் சிந்திக்கிறார். ஆனால் நடப்பு நிலவரத்தை அவர் மறந்து விட்டார். அதுதான் பின்னடைவை ஏற்படுத்தி விட்டதாக அவர்கள் கூறுகிறார்கள்.
எதார்த்தம்...
மேலும் தனிக் கட்சியாக தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது குறித்து ராகுல் யோசிக்கிறார். ஆனால் அதற்கான வாய்ப்பு இனி கிடையவே கிடையாது. இதுதான் எதார்த்தம் என்கிறார்கள் அவர்கள்.