சொத்துக்குவிப்பு வழக்கில் 30 வருடங்களுக்கு பிறகு 88 வயது மாஜி அரசு அதிகாரிக்கு ஓராண்டு சிறை
டெல்லி: 30 வருடத்திற்கு பிறகு மத்திய அரசு அதிகாரி ஒருவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
டெல்லியை சேர்ந்தவர் கிருஷ்ணன் பகதூர். 1969ம் வருடம், மத்திய சட்ட அமைச்சக துணை சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டார். படிப்படியாக வளர்ந்து, 1983ம் ஆண்டு, வணிகத்துறையின் சட்ட ஆலோசகர் பதவி வகித்தார். அப்போது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த புகார் எழுந்தது. இதையடுத்து 1984ம் ஆண்டு, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது.
1969ம் ஆண்டு பணிக்கு சேர்ந்தது முதல், 1984ம் ஆண்டுவரையில், அவரது உண்மையான வருவாய் 5.9 லட்சமாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஆனால், அவரிடம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. வருமானத்திற்கு கணக்கு காட்டியது போக, கணக்கு காட்ட முடியாத ரூ.23 லட்சத்தை அவர் முறைகேடான வழியில் சம்பாதித்தார் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
30 வருடங்களாக நடந்த இவ்வழக்கில், பகதூருக்கு ஓராண்டு சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி, கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 88 வயதாகும் பகதூர் சிறையில் தள்ளப்பட்டு்ள்ளார்.