தலையில் அடித்ததால்தான் அருணாச்சல் பிரதேச மாணவர் இறந்தார் - பிரேதப் பரிசோதனை
தெற்கு டெல்லியில்தான் இந்த சம்பவம் நடந்தது. வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த நிடோ டேனியா, சமீபத்தில் டெல்லியில் ஷாப்பிங் போயிருந்தபோது அவரது தலைமுடியைப் பார்த்து சிலர் கேலி செய்தனர். இதனால் கோபமடைந்து அதைத் தட்டிக் கேட்டார் நிடோ. இதையடுத்து மூண்ட சண்டையில் நிடோவை கடைக்காரர்கள் தாக்கி விட்டனர்.
காயமடைந்த நிடோ தனது நண்பருடன் அவரது விடுதிக்குத் திரும்பினார். அடுத்த நாள் காலையில் நிடோ மரணமடைந்தார். இதற்கு தாக்குதலே காரணம் என்று கூறப்பட்டது. நிடோ தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டன.
தற்போது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துள்ளது. அதில் தலை மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயத்தால்தான் நிடோ டேனியா மரணமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. நிடோ தலையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டதால் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அதுவே மரணத்திற்குக் காரணம் என்றும் கூறுகிறது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்.
இந்த போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கோர்ட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே டெல்லி போலீஸ் 3 பேரைக் கைது செய்துள்ளது குறிப்பிடதக்கது.