2 கி.மீ தூரத்துக்கு ரூ.150 தர மறுத்த பெண்ணை நடுரோட்டில் தாக்கிய பெங்களூர் ஆட்டோ டிரைவர்
பெங்களூர்: இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணிக்க 150 ரூபாய் கேட்ட ஆட்டோ டிரைவரை தட்டி கேட்ட, 22 வயது பெண் நடுரோட்டில் தாக்கப்பட்ட சம்பவம் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை, தலைநகரான பெங்களூரில் நடந்துள்ளது.
டெல்லியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மனித உரிமை ஆர்வலராக ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது நண்பர் ஒருவருடன், இரவு 9.30 மணியளவில் பெங்களூர் சாந்திநகர் நஞ்சப்பா சர்க்கிளில் இருந்து, கருடா மாலுக்கு செல்ல ஆட்டோ தேடியுள்ளார்.
அநியாய கட்டணம்
அப்போது KA-02-AD-450 என்ற பதிவெண் கொண்ட ஒரு ஆட்டோ அவ்வழியாக வந்துள்ளது. அதன் டிரைவரிடம் கருடா மாலுக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் 2 கிலோமீட்டர் தூரம் கொண்ட இப்பகுதிக்கு ரூ.150 கட்டணமாக கேட்டுள்ளார் அந்த டிரைவர். பிரியாவோ, இரவு நேரம் என்பதால் வேண்டுமானால், மீட்டர் தொகையைவிட கூடுதலாக பாதி தொகை தருவதாக கூறியுள்ளார். இதை ஏற்க மறுத்த டிரைவர் ஆட்டோவை கிளப்பிக் கொண்டு செல்ல தொடங்கினார்.
படம் எடுக்க முயற்சி
பயணி கூறும் இடத்துக்கு ஆட்டோ கொண்டுவர மறுப்பது குற்றச்செயல் என்பதால், அதுகுறித்து டிராபிக் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க பிரியா முடிவு செய்தார். பெங்களூரை பொறுத்தளவில், ஆட்டோ டிரைவர் இருக்கையின் பின்புறத்தில், அந்த டிரைவரின் உருவப்படம், லைசென்ஸ் குறித்த தகவல்கள் ஜெராக்ஸ் எடுத்து மாட்டப்பட்டிருப்பது கட்டாயம். எனவே காவல் துறையிடம் தெரிவிக்க வசதியாக, இந்த விவரங்களை செல்போனில் படம் எடுக்க முயன்றுள்ளார் பிரியா.
அடி, உதை
இதை பார்த்த ஆட்டோ டிரைவர், வண்டியை நிறுத்திவிட்டு வந்து பிரியாவின் தோளை பிடித்து இழுத்து பின்னால் தள்ளிவிட்டுள்ளார். மேலும் அவரது செல்போனை பறிக்க முயன்றுள்ளார். செல்போனை தர பிரியா மறுக்கவே மீண்டும் தாக்க தொடங்கியுள்ளார். தடுக்க முற்பட்ட நண்பருக்கும் அடி விழுந்துள்ளது. இதை பார்த்த அப்பகுதியிலுள்ள மேலும் சில ஆட்டோ டிரைவர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு போட்டோவை டிலிட் செய்யுமாறு கூச்சல் போட்டுள்ளனர்.
உதவி செய்யாத உள்ளங்கள்..
இதனால் அச்சமடைந்த பிரியா அங்கிருந்து சிறிது தூரம் ஓடிச் சென்று ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். அங்கும் விரட்டிவந்த பிற ஆட்டோ டிரைவர்கள், பிரியாவை ஆட்டோவில் ஏற்றிய டிரைவரிடம் சண்டை போட்டுள்ளனர். இதனால் நமக்கேன் வம்பு என்று பிரியாவை இறக்கிவிட்டு அந்த ஆட்டோ டிரைவர் கிளம்பிவிட்டார். இதனிடையே சாலையில் சென்ற பைக்குகளை கைநீட்டி மறித்த பிரியா தன்னை ஏற்றிச்செல்லுமாறு கெஞ்சியுள்ளார். ஆனால் யாருமே வண்டியை நிறுத்தவில்லை.
போலீசாரின் அலட்சியம்
ஒருவழியாக அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள அசோக்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் பிரியா. ஆனால் இது டிராபிக் போலீஸ் விவகாரம் என்று கூறி முதல் தகவல் அறிக்கையை போட மறுத்துள்ளனர், அசோக் நகர் சட்டம் ஒழுங்கு போலீசார். இந்த விவகாரம் மீடியாக்களில் கசிந்ததும், உயர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில் அசோக் நகர் போலீசார் பல மணி நேரம் தாமதமாக புகாரை பதிவு செய்து மாகடி ரோடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேந்திரனை நேற்றிரவு கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், எனது ஆட்டோ பற்றிய விவரத்தை போலீசில் பிரியா கொடுத்தால், எனக்கு பிரச்சினையாகும் என்பதால் அடித்தேன் என்று கூறியுள்ளார்.
கன்னடம் தெரியாதது குற்றமா?
இதுகுறித்து பிரியா கூறுகையில், "போலீஸ் நிலையத்தில் எனக்கு கன்னடம் பேசத்தெரியவில்லை என்பதால் இரண்டாம்பட்சமாக நடத்தினர். புகாரை கூட கன்னடத்தில் எழுதி கொடு என்று கட்டாயப்படுத்தினர். எழுதி கொடுத்தாலும், இதெல்லாம் சின்ன வழக்கு, எப்.ஐ.ஆர் தேவையில்லை என்று கூறினர். ஆனால் என்னை தாக்கியவர் மீது எப்.ஐ.ஆர் போட்டே ஆக வேண்டும் என்று நான் வலுக்கட்டாயப்படுத்த வேண்டியதாயிற்று" என்றார்.
இதுகுறித்து சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர், கமல்பந்த்திடம் கேட்டபோது "அந்த பெண் பொய் சொல்கிறார், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய போலீசார் காலதாமதம் செய்யவில்லை" என்றார்.
ஆட்டோ வாலாக்கள் அடாவடி
பெங்களூர் மாகடி ரோடு பகுதியில், ஆட்டோவை முந்திசெல்ல முயன்ற பைக் ஓட்டிகளுக்கும், ஆட்டோ டிரைவருக்கும் மோதல் ஏற்பட்டதும், இதையடுத்து ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து பைக் இளைஞர்கள் இருவரை வெட்டிக் கொன்றதும் சில வருடங்கள் முன்பு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.