பாஜக நிர்வாகி மகனின் பலநாள் கொடுமை.. உத்தரகாண்ட் இளம் பெண் கொலை.. போஸ்ட்மார்ட்டத்தில் அதிர்ச்சி தகவல்
டேராடூன்: தனது சொகுசு விடுதியில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை கொலை செய்த சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவரின் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தில் இளம் பெண்ணின் உடல் நீண்ட தேடுதலுக்கு பின்னர் ஒரு கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், உடல் மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள உடற்கூறாய்வு முடிவுகள் இளம் பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் பாவரி மாவட்டத்தில் யம்கேஷ்வர் தொகுதியில் ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது அப்பகுதி பாஜக தலைவராக உள்ள வினோத் ஆர்யாவின் மகனான புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானதாகும். இதில், 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த 18ம் தேதி தனது மகளை காணவில்லையென இளம்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பாஜக தலைவரின் மகன் வெறிச்செயல்.. உத்தரகாண்டில் இளம்பெண் கொலை.. உடல் கால்வாயிலிருந்து மீட்பு
விசாரணை
அதேபோல ரிசார்ட் சார்பாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் வெளியில் தீவிர விசாரணையும், புல்கித் ஆர்யாவிடம் கடமைக்கு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. புல்கித் ஆர்யா உள்ளூரில் செல்வாக்குள்ள நபரின் மகன் என்பதால் விசாரணையில் இந்த பின்னடைவு இருந்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் ஒரு சில நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் வெளியே கசிய தொடங்கியுள்ளது.
சிசிடிவி
இதனையடுத்து உள்ளூர் மக்களின் அழுத்தம் காரணமாக புல்கித் ஆர்யாவிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் ரிசார்ட்டின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தபோது சில உண்மைகள் வெளிவந்துள்ளன. அதாவது சம்பவம் நடந்த அன்று இளம்பெண் ரிசார்ட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே முழு சந்தேகமும் ரிசார்ட் மீது திரும்பியது. இதனையடுத்து ரிசாரட் ஊழியர்களிடம் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம்பெண்ணை தனது ஆசைக்கு இணங்க அழைத்ததாகவும், ஆனால் அப்பெண் மறுத்ததால் கடத்தப்பட்டதாகவும் ஊழியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடத்தி கொலை
மேலும் கடத்தப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதாகவும். இதில் புல்கித் ஆர்யாவின் பங்கு முக்கியமானது என்றும் ஊழியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து புல்கித் ஆர்யா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் இளம்பெண்ணின் உடலை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தேடுதல் வேட்டையில் உடல் அருகில் உள்ள கால்வாயிலிருந்து மீட்டெடுக்கப்பட்டது.
காயங்கள்
இளம்பெண்ணின் பெற்றோர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது உடற்கூறாய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், இளம்பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இளம்பெண் நீரில் மூழ்கியதால்தான் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் குடும்பத்தினரிடையேயும், உள்ளூர் மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த சம்பவத்தில் பாஜக தலைவரின் மகன் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், ரிசார்ட்டுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.