எப்படியாவது குழந்தையை காப்பாற்றுங்கள்...டாக்டர்களிடம் கெஞ்சிய தாய் - துடிதுடித்து மரணித்த குழந்தை
என் குழந்தையை காப்பாற்றுங்கள் என்று மருத்துவர்களிடம் கெஞ்சியும் பயணில்லாமல் போனது. மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி ஆம்புலன்ஸ்சில் காத்திருந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா பாதித்த ஒன்றரை வயது குழந்தை ஆம்புலன்ஸ்சிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. 90 நிமிடங்கள் தங்களின் கண் முன்னே துடி துடித்து போராடி உயிரிழந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறிய காட்சி பலரின் கண்களையும் குளமாக்கியது.
கொரோனாவிற்கு பலியான குழந்தையின் பெயர் ஜான்விதா. விசாகப்பட்டினம் மாவட்டம் அச்சுதபுரம் மந்தல் அடுத்த சவுதுபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரபாபு என்பவரின் மகளாவார். சுட்டிக்குழந்தை ஜான்விதாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டது.

சாதாரண காய்ச்சல்தான் என்று உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டனர். சில நாட்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கவே தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கொரோனாவாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்தனர். அதில் குழந்தைக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது.
உடனடியாக குழந்தையை அரசு கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுமாறு தனியார் மருத்துவர்கள் கூறியுள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் குழந்தையை எடுத்துக்கொண்டு பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் மருத்துவமனை வாசலிலேயே காத்திருந்தனர்.
நேரம் செல்லச் செல்ல குழந்தையின் மூச்சுத்திணறல் அதிகரித்தது. உடனடியாக ஆம்புலன்ஸில் வைத்து குழந்தைக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. ஜான்விதாவின் தந்தையே குழந்தையின் அருகில் அமர்ந்து ஆக்சிஜன் பம்பை அழுத்திக் கொண்டிருந்தார்.
எனது குழந்தையின் உயிரை காப்பாற்றுங்கள் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் தாயார் கெஞ்சினார். தங்களுக்கு படுக்கை வசதி இல்லை என்றாலும் பரவாயில்லை. சிகிச்சை அளித்தால் மட்டும் போதும் என்றும் மாறி மாறி கெஞ்சியும் பயனில்லாமல் போனது. 2 மணி நேரம் ஆம்புலன்ஸ்சில் காத்திருந்த குழந்தை ஜான்விதா துடி துடித்து உயிரிழந்தார்.
தங்களின் கண் முன்னே குழந்தை மரணமடைந்ததைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். மருத்துவமனை வாசலில் அழுது மயக்கமடைந்தார் குழந்தையின் தாயார். இந்த காட்சி மருத்துவமனைக்கு வந்திருந்த அனைவரின் கண்களையும் குளமாக்கியது.
குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தாமதமானதாலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள், ஊழியர்கள் மீது பெற்றோர்கள் குற்றம் சாட்டி சண்டையிட்டனர். என் குழந்தையை டாக்டர்கள் கை விட்டு விட்டனர். அவளை காப்பாற்ற போராடியும் பயனில்லாமல் போனது.
சாலையில் என் மகள் உயிர் போய் விட்டது.
104 எண்ணை டயல் செய்யச் சொன்னார்கள். அந்த எண்ணிற்கு அழைத்தும் பயணில்லை யாரும் பதிலளிக்கவில்லை என்றும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொரோனா என்ற கொடிய அரக்கனின் பிடியில் இளம் பிஞ்சுகள் முதல் முதியவர்கள் வரை சிக்கித்தவிக்கின்றனர். தினசரியும் பல ஆயிரம் பேர் மரணமடைந்து வருகின்றனர். நாடு முழுவதும் நடைபெறும் சம்பவங்கள் பலரது மனதை பாதித்து வருகிறது.












Click it and Unblock the Notifications