திருநங்கைகளை ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை
டெல்லி: இட ஒதுக்கீட்டுச் சலுகைகளை திருநங்கைகள் பெறும் வகையில், அவர்களை மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி.) சேர்க்க வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செவ்வாய்க்கிழமை பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் எஸ்.கே. கார்வேந்தன் டெல்லியில் செய்தியாளரிடம் பேசியதாவது:
"சமூகநிலை மற்றும் கல்வியில் மிகவும் பின்தங்கிய வகுப்பினராக திருநங்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் கருத வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் அரவாணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஏற்று, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி, ஓ.பி.சி. பட்டியலில் திருநங்கைகளை சேர்க்க வேண்டும் என மத்திய அரசிடம் பரிந்துரை செய்வதென்றும் முடிவு செய்தது' என்றார்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்பதா? அல்லது வேண்டாமா என்பது குறித்து மத்திய அமைச்சரவைதான் இனிமேல் முடிவு செய்ய வேண்டும். இந்தப் பரிந்துரையை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டால், வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.