கேரள கோவில்களில் பிச்சைக்காரர்களுக்குத் தடை....
கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் சீசன் நேரத்தில் ஏராளமான பிச்சைக்காரர்கள் குவிந்து பக்தர்களை மிகுந்த தொந்தரவு செய்கின்றனர். இதையடுத்து பிச்சைகாரர்களுக்கும், லாட்டரி விற்பனை செய்பவர்களுக்கும் தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் பி.ராதாகிருஷ்ணன், அணு சிவராமன் அடங்கிய அமர்வு இப்பிரச்சினையை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக்கொண்டது. அவர்கள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளதாவது:

திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் கொச்சின் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் சீசன் சமயங்களில் ஏராளமான பிச்சைக்காரர்கள் வெளி மாநிலங்களில் இருந்து குவிந்து விடுகின்றனர். லாட்டரி விற்பவர்களும் கோயில்களை சுற்றி ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். கோவில்களுக்கு வரும் பக்தர்களிடம் பணம் கேட்டு தொல்லை செய்கின்றனர். எனவே கோயில்களில் பிச்சைக்காரர்களுக்கும், லாட்டரி விற்பவர்களுக்கும் இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது.
இந்த உத்தரவை வருவாய்த்துறை அதிகாரிகளும், தேவஸ்தானத்தைச் சேர்ந்தவர்களும் உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேலும், சபரிமலை உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் மதுவிலக்கை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும். இது குறித்து அனைத்து மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications