பெங்களூர் பள்ளி சிறுமி பலாத்கார வழக்கில் திருப்பம்: மோசடி வழக்கில் பள்ளி நிர்வாகி கைது
பெங்களூர்: பெங்களூர் பள்ளியில் படிக்கும் 3 வயது மாணவி பள்ளி வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, மோசடியாக பள்ளி நடத்திய குற்றத்திற்காக பள்ளி செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூர் ஜாலஹள்ளியில் உள்ளது ஆர்ச்சிட் இன்டர்நேஷனல் பள்ளி. இப்பள்ளிக்கு பெங்களூரில் மட்டும் ஆறு கிளைகள் உள்ளன. இதேபோன்று நாட்டின் பல பகுதிகளிலும் கிளைகள் உள்ளன.
ஜாலஹள்ளியிலுள்ள பள்ளியில் நர்சரி படித்து வந்த 3 வயது மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததில் இருந்து அழுது கொண்டே இருந்துள்ளார். மேலும் அவருக்கு காய்ச்சலும் அடித்துள்ளது. இதையடுத்து சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, சிறுமியிடம் கேட்டதற்கு பள்ளியில் ஒரு அங்கிள் தான் தன்னை ஏதோ செய்ததாக தெரிவித்தார். இது குறித்து சிறுமியின் தந்தை ஜாலஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பள்ளியின் அட்டென்டர் குண்டப்பா (45) என்பவரை சந்தேகத்தின்பேரில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் ஆய்வு செய்த துவக்க கல்வித்துறை அதிகாரிகள், அந்த பள்ளியில் விதிமுறைகளை மீறியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை கன்னட மீடியத்தில் கல்வி கற்றுக்கொடுப்பதாக அனுமதி வாங்கிய இந்த பள்ளியில், 7ம் வகுப்பு வரை கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டதும், நர்சரி நடத்துவதற்கும் அனுமதி பெறாததும் தெரியவந்துள்ளது. மேலும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தை கற்றுக்கொடுக்கும் இந்த பள்ளி, இதற்கான அனுமதியை மாநில அரசு அல்லது மத்திய அரசிடம் பெறாததும் இந்த ஆய்வில் தெரியவந்தது.
900 மாணாக்கர்கள் கல்வி பயிலும் இந்த பள்ளியில், இதுபோன்ற மோசடி நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து வடக்கு பெங்களூர் பள்ளியை நிர்வகிக்கும் அறக்கட்டளை செயலாளர் கே.ஆர்.கே.ரெட்டி என்பரை போலீசார் கைது செய்துள்ளனர். சிபிஎஸ்சி அனுமதி பெறாமலேயே பள்ளியை நடத்தியதால் மோசடி புகாரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலாத்கார சம்பவத்தின் காரணமாக விசாரணை நடத்த தொடங்கியபோது, திடீர் திருப்பமாக சிபிஎஸ்சி மோசடி வெளியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.