பெங்களூரில் இளம்பெண்ணை பஸ்ஸுக்குள் வைத்து பூட்டிய கண்டக்டர்: 45 நிமிடமாக உதவி கேட்டு கதறல்
பெங்களூர்: பெங்களூரில் இளம்பெண் ஒருவரை பேருந்தில் பூட்டிவைத்த கண்டக்டரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூர் ஏலஹங்காவில் திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது ஆண் நண்பருடன் மாநகர பேருந்தில் புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு ஏறியுள்ளார். திவ்யா பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரது நண்பர் அவரது அருகில் நின்றுள்ளார்.
இந்நிலையில் கண்டக்டர் உமாஷங்கர்(51) திவ்யாவின் நண்பரை வேறு இடத்தில் சென்று நிற்குமாறு கூறி வாக்குவாதம் செய்து தள்ளிவிட்டுள்ளார். பதிலுக்கு அந்த நபர் உமாஷங்கரை தள்ளிவிட்டுவிட்டு பேருந்தில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.
இதையடுத்து பேருந்து ஏலஹங்கா காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பேருந்து நிலையம் முன்பு கண்டக்டர் திவ்யாவை பேருந்துக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றுள்ளார். திவ்யா உதவி கேட்டு 45 நிமிடங்களாக கூச்சலிட்டும் பலனில்லை.
45 நிமிடங்கள் கழித்து உமாஷங்கர் திவ்யாவை பேருந்தில் இருந்து வெளியே செல்ல அனுமதித்தார். இது குறித்து திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஃபேஸ்புக்கிலும் இந்த சம்பவம் பற்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அவரது ஃபேஸ்புக் பதிவு வைரலாகிய நிலையில் போலீசார் உமாஷங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.
திவ்யா பின்னர் தனது ஃபேஸ்புக் பதிவு மற்றும் வீடியோவை டிலீட் செய்துவிட்டார்.
உமாஷங்கர் கூறுகையில்,
திவ்யாவின் நண்பர் பெண்களுக்கான இருக்கையில் அமர்ந்தார். அதனால் தான் அவரை அங்கிருந்து எழுந்து ஆண்கள் இருக்கைக்கு செல்லுமாறு கூறினேன். ஆனால் அவர் என்னுடன் வாக்குவாதம் செய்து என்னை கீழே தள்ளிவிட்டார் என்றார்.
உமாஷங்கரும், டிரைவரும் திவ்யாவிடம் அவரது நண்பரின் விபரங்களை அளிக்குமாறு கேட்க அவர் மறுத்துவிட்டார். அதன் பிறகு உமாஷங்கர் திவ்யாவை பேருந்துக்குள் வைத்து பூட்டியுள்ளார். திவ்யா பேருந்துக்குள் பூட்டப்பட்டதை சில போலீசாரும் பார்த்துள்ளனர்.