பழைய ரூபாய் நோட்டு மாற்றி சிக்கிய பெங்களூர் ரவுடிக்கு தமிழக விஐபிகளுடன் தொடர்பு.. விசாரணையில் திடுக்
ரவுடி நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூரை விட தமிழகத்தில் முக்கிய புள்ளிகளிடம் நாகராஜ் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக தெரிய வந்துள்ளது.
பெங்களூர்: பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெங்களூரை சேர்ந்த பிரபல ரவுடிக்கு தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் புள்ளிகள், வங்கி அதிகாரிகளுடன் தொடர்புள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் முன்னாள் கவுன்சிலர் நாகராஜ். பாம் நாகராஜ் அல்லது பாம் நாகா என பெயர் பெற்றவர். கொலை, கொள்ளை உட்பட, இவர் மீது 30க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் நிலுவையிலுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரின், ஹெண்ணூரை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரிடம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி தருவதாக கூறி, வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு அவரை மிரட்டிய நாகராஜ், தொழில் அதிபரிடமிருந்த அனைத்து பணத்தையும் பறித்துக் கொண்டார். இதனால் கோபமடைந்த அந்த தொழிலதிபர் போலீசில் புகார் கொடுத்தார்.

ரூ.15 கோடி சிக்கியது
இதையடுத்து, இதற்காக கடந்த ஏப்.14ம் தேதி அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பண மதிப்பிழப்பிற்கு முந்தைய ரூ.15 கோடி மதிப்பிலான ரூ.500 மற்றும் ரூ.1000 பழைய ரூபாய் நோட்டுகள் சிக்கின.

சிடி ரிலீஸ்
இருப்பினும் நாகராஜ் தப்பியோடிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் மறைவிடத்தில் இருந்தபடி மீடியாக்களுக்கு இறு சிடிகளை ரிலீஸ் செய்தார். அந்த சிடியில், தன்னிடம் பணம் மாற்றித் தர வற்புறுத்தியது, கர்நாடகாவை சேர்ந்த சீனியர் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள்தான் என்று கூறியிருந்தார். இந்த நிலையில், நாகராஜ் தமிழகத்திலுள்ள ஆர்க்காட்டில் மறைந்திருக்கும் தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

துரத்தி பிடித்தனர்
இதையடுத்து ஆர்க்காட்டுக்கு போலீசார் விரைந்தனர். போலீசார் சுற்றி வளைத்ததை கவனித்த நாகராஜ் மாருதி ஆம்னி வேனில் தனது மனைவி, 2 மகன்களுடன் தப்பியோடினார். போலீசார் சுமார் 25 கி.மீ தூரம் துரத்திச் சென்று நாகராஜை மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து நாகராஜையும், மகன்களையும் பெங்களூர் அழைத்து வந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் தொடர்பு
நாகராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பெங்களூரை விட தமிழகத்தில் முக்கிய புள்ளிகளிடம் நாகராஜ் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக தெரிய வந்துள்ளது. 20 முதல் 25 சதவீதம் கமிஷன் பெற்று கொண்டு, கர்நாடகத்தில் உள்ள தொழில் அதிபர்களின் கருப்பு பணத்தை தமிழகத்தில் உள்ள முக்கிய விஐபி மூலம் மாற்றி கொடுத்து வந்தார். இதற்காக தமிழகத்தை சேர்ந்த ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அதிகாரிகள் மற்றும் முக்கிய விஐபி ஒருவரின் மகன் ஆகியோர் இவருக்கு உதவி செய்துள்ளனர். இதற்காக நாகராஜ் அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கமிஷனாக கொடுத்துள்ளார். இவர் தமிழகத்தில் பதுங்கியிருந்தது சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஆர்.பி.ஐ அதிகாரிகள்
இவரது வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதால் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். இந்நிலையில் பெங்களூரு போலீசாரின் கவனம் தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் ஆர்.பி.ஐ அதிகாரிகளின் பக்கம் திரும்பியுள்ளது. முறையான ஆதாரங்களின் பேரில் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதற்கிடையில் போலீஸ் காவல் முடிந்த நாகராஜ் நேற்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரை ஜூன் 7ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். தேவைப்படும் நேரங்களில் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications