ஜெ. ஜாமீன் மனு விசாரணை: மீண்டும் அரசு வக்கீல் என்ற அதிகாரத்தோடு களமிறங்கிய பவானிசிங்
பெங்களூர்: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு வக்கீல் பவானி சிங் இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்திற்கான சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர் பவானிசிங். நேற்று ஜெயலலிதா மீதான ஜாமீன் மனு மீது அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராக வந்திருந்தார். ஆனால் அரசு சார்பில் வக்காலத்து வாங்குவதற்கு பவானிசிங்கிற்கு முறையான அனுமதி தரவில்லை என்பதால் தன்னால் இதில் ஆஜராக முடியாது என்று கைவிரித்தார் பவானிசிங்.
இதன்பிறகுதான், 10 வருடத்துக்கு உட்பட்ட சிறை தண்டனையாக இருந்தால், அரசு வக்கீல் இல்லாமல் கூட ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தலாம் என்று கூறி சிறப்பு அமர்வுக்கு ஏற்பாடு செய்யுமாறு ஜெ. தரப்பு கேட்டது. அதன்படி இன்று சிறப்பு அமர்வு நீதிபதி ரத்தினகலா ஜெயலலிதா மீதான ஜாமீன் மனுவை விசாரித்தார்.
இதனிடையே நேற்றுதான் தனது தவறை உணர்ந்த கர்நாடக அரசு, இரவுக்குள்ளாக, பவானிசிங்கை அரசு வக்கீலாக நியமிக்கும் அரசாணையை பிறப்பித்தது. இதனால் இன்று முழு அதிகாரத்தோடு கோர்ட்டுக்குள் நுழைந்தார் பவானிசிங்.
இன்று ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியதுமே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க மிகக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார் பவானிசிங்.
இதையடுத்து அவரது மனு ஒத்தி வைக்கப்பட்டது.