ஜூலை 28-ல் பெங்களூரு மாநகராட்சித் தேர்தல்- வரிந்து கட்டும் காங்., பா.ஜ.க.!
பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தேர்தல் ஜூலை 28-ந் தேதி நடைபெறும் என்று கர்நாடகா மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெங்களூரில் மாநில தேர்தல் ஆணையர் சீனிவாச்சாரி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கான அறிவிக்கை ஜூலை 8-ந் தேதி வெளியிடப்படும். அன்று வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஜூலை 15-ந் தேதியுடன் மனு தாக்கல் முடிவடையும்.
ஜூலை 16-ந் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். ஜூலை 20-ந் தேதி வேட்புமனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாளாகும். ஜூலை 28-ந் தேதி காலை 7 முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். ஜூலை 30-ந் தேதி அவசியம் ஏற்பட்டால், மறுதேர்தல் நடத்தப்படும்.
ஜூலை 31-ந் தேதி காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். ஆக.1-ந் தேதிக்கு முன்பாக அனைத்து தேர்தல் பணிகளும் நிறைவு பெறும். பெங்களூரு மாநகராட்சியின் 198 வார்டுகளிலும் தேர்தல் நடத்தை விதிமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது. 198 வார்டுகளிலும் மொத்தம் 6,733 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
இந்தத் தேர்தலில் மொத்தம் 71,22,165 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 37,38,808 பேர் ஆண்கள், 33,82,231 பேர் பெண்கள்; 1,126 பேர் திருநங்கைகள். வேட்பாளர்களின் செலவு வரம்பு ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சீனிவாச்சாரி தெரிவித்தார்.
கட்சிகள் மும்முரம்
கர்நாடகாவில் தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதனால் பெங்களூர் மாநகராட்சியைக் கைப்பற்ற அக்கட்சி தீவிரமாக முயற்சிக்கும்.
அதே நேரத்தில் பாரதிய ஜனதாவோ, 198 வார்டுகளிலும் நாங்கள் போட்டியிடுவோம். 2010ஆம் ஆண்டைப் போல பெங்களூரு மாநகராட்சியைக் கைப்பற்றுவோம் என கூறியுள்ளது. இந்த கட்சிகளுக்கு இடையே மதச்சார்பற்ற ஜனதா தளமும் வியூகம் வகுத்து பெங்களூர் மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்கிறது.
5 ஆக பிரிப்பு?
இதனிடையே பெங்களூரு மாநகராட்சியை 5 மாநகராட்சிகளாக பிரிப்பதற்கான பரிந்துரையை இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு முதல்வர் சித்தராமையாவிடம் அளித்துள்ளது.
இந்த பரிந்துரைகளில் ஒவ்வொரு வார்டும் 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் மேயர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகாலம் இருக்க வேண்டும் என்றும் இடம்பெற்றுள்ளது.