லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத பிசிசிஐ நிர்வாகிகளை கூண்டோடு மாற்றுக: சுப்ரீம்கோர்ட் சீற்றம்
டெல்லி: பிசிசிஐயின் நிர்வாகத்தில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் முன்னாள் நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான குழு அளிக்கப்பட்டது. இந்தக்குழு தனது பரிந்துரைகளை சமீபத்தில் அளித்தது. ஆனால், இந்த பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பு தெரிவிப்பதாக பிசிசிஐ மீது குற்றம் சாட்டி கடந்த சில தினங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் லோதா குழு அறிக்கை அளித்தது.
இந்த நிலையில்,இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் நிலவர அறிக்கை தாக்கல் செய்துள்ள பிசிசிஐ, லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது. மேலும், பிசிசிஐ கிரிக்கெட் சங்கம் தமிழ்நாடு சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளளது. சொசைட்டின் சட்டத்தின் கீழ் எந்த திட்டமும் செயல்படுத்த வேண்டும் என்றால் பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
அனைத்து உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் லோதா குழுவின் பரிந்துரைகள் சில ஓட்டெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. லோதா கமிட்டியின் சில பரிந்துரைகளை மாநில கிரிக்கெட் சங்கங்கள் நிராகரித்துள்ளன. எனவே, லோதா கமிட்டியின் பரிந்துரகளை அமல்படுத்தவில்லை என கூறுவது தவறு. லோதா கமிட்டி குற்றச்சாட்டில் உண்மையில்லை லோதா கமிட்டி அனுப்பிய மெயிலுக்கு பதில் அனுப்பவில்லை என்பதில் உண்மையில்லை. 40 மெயில்களை அனுப்பியுள்ளோம், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டது. லோதா கமிட்டி சார்பில் வாதிட்ட கோபால் சுப்பிரமணியம், பிசிசிஐ சுப்ரீம்கோர்ட்டை எதிர்த்து நிற்கிறது. லோதா கமிட்டியின் பல்வேறு பரிந்துரைகளை பிசிசிஐ தனது வாக்கெடுப்பு மூலம் தள்ளுபடி செய்துள்ளது. மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு வழ்ககம்போல நிதி பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது. நிதி பரிமாற்றத்தில் புது கொள்கை கொண்டுவர சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையிலும், அதை பிசிசிஐ மதிக்கவில்லை என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பிசிசிஐ உயர் பதவிக்கு தகுதியான நபர்களை நீங்களே பரிந்துரை செய்யுங்களேன் என்றனர். ஒரே ஒரு ரஞ்சி போட்டியில் ஆடிய அனுராத் தாக்கூர் பிசிசிஐ தலைவரா என கேலி செய்தார், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்.
பிசிசிஐ சார்பில் வாதாடிய கபில் சிபல், அனுராக் ஒரு கிரிக்கெட் வீரர்தான் என்று கூறியபோது, குறுக்கிட்ட தாக்கூர், பார் அசோசியேஷனுக்கு எதிரான கிரிக்கெட் ஆட்டத்தில், நீதிபதிகள் அணிக்கு நான் கூட கேப்டனாக இருந்துள்ளேன். அதற்காக உங்கள் (வக்கீல்) வழக்குகளையெல்லாம் நான் தள்ளுபடி செய்யவில்லையே, என்று மீண்டும் கேலி செய்தார். லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், அல்லது, பிசிசிஐ புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கபில் சிபல் கூறுகையில், மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ வழங்கியுள்ள 400 கோடி ரூபாய் வழக்கமான பரிவர்த்தனைதான். லோதா கமிட்டி வழக்கறிஞர் குற்றம்சாட்டுவதை போன்று, லோதா கமிட்டிக்கு எதிராக வாக்களிக்க வழங்கப்பட்ட லஞ்சப் பணம் கிடையாது என்றார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.