மக்களுக்கு தரமான மாட்டிறைச்சி கிடைக்க செய்வேன்.. வாக்குறுதி அளித்தாரா பாஜக வேட்பாளர்?
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், மல்லப்புரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ், மாட்டு இறைச்சிக்கு ஆதரவாக கருத்துக் கூறியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில் அதுகுறித்து பாஜக தலைமை அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.
மல்லப்புரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ், என்னை வெற்றிபெறச் செய்தால், மக்கள் அனைவருக்கும் தரமான மாட்டிறைச்சி கிடைக்கச்செய்வேன் என பிரசாரம் செய்ததாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், பசுவதைக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், பசுவை புனிதம் என கருதும் மக்களின் ஆதரவு பெற்ற பாஜக வேட்பாளர் ஒருவர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மலப்புரம் தொகுதி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால் இவர் இவ்வாறு பிரசாரம் செய்தார் என கூறப்பட்டது.
இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைமை இவரிடம் விளக்கம் கேட்டுள்ளது. பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேட்டியளித்த ஸ்ரீபிரகாஷ், தனது பிரசாரம் தவறாக செய்தியாக மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். தரமான உணவு கிடைக்க வழி செய்வேன் எனத்தான் நான் கூறினேன் என்றும், பாஜக தலைமையின் பசு வதைக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் தனக்கு உடன்பாடு உள்ளதாகவுமம் அவர் தெரிவித்தார்.