சகிப்புத்தன்மை இருக்க வேண்டும்.. அதற்காக வெறுப்புப்பேச்சுகளை கேட்க வேண்டியதில்லை -நீதிபதி சந்திரசூட்
காந்திநகர்: மற்றவர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டு சகிப்புத்தன்மையுடன் இருப்பதால் வெறுக்கத்தக்க பேச்சுக்களையும் கேட்டுக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையென உச்சநீதிமன்றம் நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற சந்திரசூட் மேற்குறிப்பிட்ட கருத்தை கூறியுள்ளார்.
மேலும், "மாணவர்களாகிய நீங்கள் சொந்த மனசாட்சி மற்றும் நியமான காரணத்தால் வழிநடத்தப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
குஜராத் சட்ட பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட், மேற்குறிப்பிட்ட கருத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "நாம் செய்யும் வேலைகள் நீண்ட காலத்திற்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டும். மேலும், இப்படியான பணியின்போது கவன சிதறல்கள் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். பிரெஞ்சு எழுத்தாளர் வால்டேரின் வரிகளை மாணவர்களாகிய நீங்கள் கடைபிடிக்க வேண்டும்" என்றும் நீதிபதி கூறினார்.
அதாவது, "எந்த ஒரு கருத்தையும் சொல்ல பிறருக்கு உரிமையுண்டு. அப்படி சொல்லப்படும் கருத்துக்களை ஏற்க நமக்கு விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனால் அவரின் கருத்துரிமையை நாம் நிச்சயம் நமது மரணம் வரை பாதுகாக்க வேண்டும் என்பது வால்டரின் பிரபல கூற்றாகும். இதை மாணவர்கள் பின்பற்ற வேண்டும். அதேபோல சகிப்புத்தன்மையுடன் இருப்பது என்பது அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அர்த்தப்பட்டுவிடக்கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர்,
"மாணவர்களாகிய நீங்கள் பட்டம் பெற்று வெளி உலகில் அடியெடுத்து வைக்கும்போது பெரும்பான்மையினரின் அரசியல், சமூக மற்றும் தார்மீக மோதல்களின் மேலெழும் இரைச்சல்களில் குழம்பிவிடாமல், சொந்த மனசாட்சியின்படியும் நியாமான காரணங்களின்படியும் பயணிக்க வேண்டும்" என்று கூறி அமெரிக்க எழுத்தாளர் சேத் காடினின் நீரோட்டம் மற்றும் காற்றின் ஒப்புமையை மேற்கோள் காட்டினார். "அதாவது நீரோட்டம் என்பது வர்க்கம், இனம்,பாலினம், மற்றும் சக்திவாய்ந்த தொழில் பொருளாதாரம் ஆகியவையாகும். நமது சூழலில் இதில் சாதியும் அடங்கும்."
"இந்த நீரோட்டத்தை நம்மால் சமாளிக்க முடியும் ஆனால், இதற்கு ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி தேவை. இந்த விசயத்தில் காற்று என்பது, பிரேக்கிங் செய்திகள், சமூக ஊடக செய்திகள், மிகைப்படுத்தப்பட்ட விஷயங்கள் என கருதலாம். இவைகள்தான் கவன சிதறலை ஏற்படுத்தும்" என நீதிபதி அமெரிக்க எழுத்தாளரின் மேற்கோளுக்கு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் இந்த கருத்துக்கள் எந்த சூழலுக்கும் பொருத்தமானவை என்றும் நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.